ADVERTISEMENT

துபாயில் பெய்த கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு.. அமீரக மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் தகவல்..!!

Published: 2 May 2024, 12:33 PM |
Updated: 2 May 2024, 12:37 PM |
Posted By: jesmi

அமீரகத்தில் இன்று மோசமான வானிலை நிலவி வரும் பட்சத்தில் இந்த வானிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் இன்று பெய்த கனமழையால் அமீரகத்தில் பெரும் பகுதிகளில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கனமழை காரணமாக விமான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் இந்த நிலையற்ற வானிலை குறித்து ஏற்கெனவே வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில் அதற்கேற்றவாறு இந்த வானிலையை சமாளிக்க பயணிகளுக்கு வழிகாட்டுதல்களையும் துபாய் ஏர்போர்ட்ஸ் மற்றும் விமான நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும், துபாய்க்கு வரவேண்டிய 9 விமானங்கள் மற்றும் துபாயில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து இயங்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இன்று குறிப்பிட்ட விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஏதேனும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் இடமளிக்கப்படும். மறுபதிவு செய்ய விரும்புவோர் தங்கள் பயண முகவர் அல்லது அருகிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் அனைத்து மறு முன்பதிவு செய்வதற்கான கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்” என கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “வியாழன் (மே 2) அன்று துபாயில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமான செயல்பாடுகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகள் கார் அல்லது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தாலும், DXB செல்வதற்கான பயணத்திற்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் விமானம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு ஃப்ளைதுபாய் இணையதளத்தை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவை தளமாகக் கொண்ட ஏர் அரேபியா விமான நிறுவனமானது, அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவிலிருந்து பயணிக்கும் நபர்களை மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு வருவதற்கு கூடுதல் பயண நேரத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சமீபத்திய விமானப் புதுப்பிப்புகளைப் பெற, தங்கள் முன்பதிவில் தொடர்புத் தகவலைப் புதுப்பிக்குமாறு தங்கள் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல் இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு வரும் மற்றும் புறப்படும் பயணிகளுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானங்கள் பாதிக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel