ஷார்ஜாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சக நண்பர்களுடன் அல் மம்சார் கடற்கரைக்கு குளிக்க சென்ற 25 வயது இந்திய இளைஞர் ஒருவர், குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வார விடுமுறையில் குளிக்க சென்ற போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களின்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் காவல்துறை செயல்பாட்டு அறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், தேசிய ஆம்புலன்ஸுடன் போலீஸ் ரோந்து மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது, புகாரின் பேரில் புஹைரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்களை விரைவாக அனுப்புவதற்கு, நீரில் மூழ்கி இறந்தவர்கள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கடற்கரையில் நீந்தும் போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும், பாதுகாப்பான நீச்சல் இடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel