துபாய் டூட்டி ஃப்ரீயின் (DDF) கடந்த இரண்டு டிராக்களிலும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் 1 மில்லியன் டாலர் கிராண்ட் பரிசை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற சமீபத்திய டிராவில், 55 வயதான துபாயில் வசிக்கும் தாமஸ் பிராடோ வெற்றி பெற்று, உடனடி மில்லியனர் ஆனார். இருப்பினும், நான்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இந்த கிராண்ட் பரிசைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு தசாப்தங்களாக அமீரகத்தில் வசித்து வரும் தாமஸ், கடந்த 10 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீயில் பங்கேற்று வந்த நிலையில், தற்பொழுது கிராண்ட் பரிசை வென்று அதிர்ஷ்டசாலி ஆகியுள்ளார். இந்த வெற்றி குறித்து மனம் திறந்து பேசிய அவர், கிடைக்கும் ரொக்கப் பரிசை அவரது சில கடன்களை அடைக்கவும், குழந்தைகளின் கல்விக்காகவும் பயன்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார், அதே நேரத்தில் நான் சில மத நன்கொடைகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “எனக்கு மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே, மற்றொரு இந்தியரும் துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் 1 மில்லியன் டாலரை வென்று மில்லியனராக மாறியுள்ளார். லிவ் ஆஷ்பி என்ற 45 வயதான இந்தியர் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 480 இல் கிராண்ட் பரிசை வெல்லும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 2005 முதல் துபாயில் வசிக்கும் ஆஷ்பி தனது இரண்டு நண்பர்களுடன் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியதால், அவர்கள் மூவரும் பரிசைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இது குறித்து கூறுகையில் “வெற்றி பெற்றதை நம்பமுடியவில்லை. இது நிச்சயமாக எங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்” என்று துபாய் விமான நிலையத்தின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரியும் இவர் கூறினார். பிராடோ மற்றும் ஆஷ்பி ஆகியோர் 1999 முதல் தொடங்கிய மில்லினியம் மில்லியனர் சீரிஸில் வென்ற 238வது மற்றும் 239வது இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel