ADVERTISEMENT

வாகன ஓட்டிகளே உஷார்.. துபாயில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் 2 புதிய சாலிக் கேட்கள்!!

Published: 23 Nov 2024, 6:56 PM |
Updated: 23 Nov 2024, 6:56 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ‘பிசினஸ் பே கேட் (Business Bay Gate)’ மற்றும் ‘அல் சஃபா சவுத் கேட் (Al Safa South Gate)’ ஆகிய இரண்டு புதிய சாலிக் டோல் கேட்களை நாளை (நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் துபாயில் உள்ள சாலிக் நிறுவனம் இயக்கப்படும் டோல் கேட்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.

ADVERTISEMENT

இந்த புதிய டோல் கேட்கள் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் ஷேக் முகமது பின் சையத் சாலை (E311), துபாய்-அல் அய்ன் சாலை, ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட் மற்றும் அல் மனாமா ஸ்ட்ரீட் உள்ளிட்ட மாற்று வழிகள் மூலம் டோல்கேட் இல்லாத சீரான போக்குவரத்து ஓட்டத்தையும் இந்த முயற்சி உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

துபாயில் அல் சஃபா சவுத்தில், அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட் இடையிலும், அல் கைல் சாலையில் பிசினஸ் பே கிராசிங்கிலும் அமைந்துள்ள புதிய சாலிக் கேட்கள் செயல்படத் தொடங்கினால் சாலை நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் அல் ஹடாத் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, புதிய டோல் கேட்கள் போக்குவரத்து நெரிசலை 16 சதவீதம் வரை குறைக்க அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பிசினஸ் பே கிராசிங் கேட்: அல் கைல் சாலையில் 12 முதல் 15 சதவீதமும், அல் ரபாத் தெருவில் 10 முதல் 16 சதவீதமும் போக்குவரத்தை குறைக்கும்:

அல் சஃபா சவுத் கேட்:

ADVERTISEMENT
  • ஷேக் சையத் சாலையிலிருந்து மேதான் ஸ்ட்ரீட் வரை வலதுபுறம் திரும்பும் போக்குவரத்து அளவு 15 சதவீதம் குறையும்
  • ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் மற்றும் மேதான் ஸ்ட்ரீட் இடையே போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும்
  • ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட் மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்டிற்கு போக்குவரத்தை மறுபகிர்வு செய்யப்படும்.

அல் சஃபா சவுத் கேட் என்பது தற்போதுள்ள வடக்கு அல் சஃபா வாயிலுடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வு என்பதால், ஒரு மணி நேரத்திற்குள் வடக்கு மற்றும் தெற்கு சஃபா வாயில்கள் வழியாகச் செல்பவர்களுக்கு ஒரே ஒரு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதையும் ஹதாத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், புதிய டோல் கேட்கள் இரண்டும் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சூரிய சக்தியில் இயங்கும் என்றும், இது துபாயின் இலக்குகள் மற்றும் பசுமை ஆற்றலுக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் இணைந்த நமது நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சாலிக்கின் டோல் கேட்கள் வழியாக சுமார் 593 மில்லியன் பயணங்கள் சென்றன என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, எட்டு சுங்கச்சாவடிகள் வழியாக 238.5 மில்லியன் பயணங்கள் சென்றன என்றும், இதன் விளைவாக 1.1 பில்லியன் அரையாண்டு வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தை விட 5.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel