புதிய ஆண்டான 2025 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ஜனவரி 1, புதன்கிழமை மற்றும் ஜனவரி 2, 2025 வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவித்து குவைத் அமைச்சரவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இரண்டு அதிகாரப்பூர்வ இடைவெளிகளுக்கு இடையில் வரும் ஜனவரி 2 வியாழன் கூடுதல் விடுமுறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக, பயான் அரண்மனையில் (Bayan Palace) நடைபெற்ற வாராந்திர கூட்டத்தின் போது அமைச்சரவை தெளிவுபடுத்தியுள்ளதாக குவைத் செய்தி ஏஜென்சி (Kuwait News Agency) செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, குடியிருப்பாளர்கள் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுடன் வார விடுமுறை நாட்களான வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையை சேர்த்து புத்தாண்டிற்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்கலாம். பின்னர், ஜனவரி 5, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல வேலைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறப்புச் செயல்பாடுகளைக் கொண்ட அரசு அமைப்புகள், பொது நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தங்களுடைய சொந்த வேலையை கருத்தில் கொண்டு புத்தாண்டிற்கான பொது விடுமுறைகளை தீர்மானிக்கலாம் என்றும் அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel