ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாயில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில், அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டு நடைமுறைகளையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்ளவும், ஐக்கிய அரபு அமீரகக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைக்காமல் இணைந்து வாழவும் அனுமதிக்கிறது என்று துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் (Dubai Culture and Arts Authority) தலைவர் ஷேக்கா லதிஃபா பின்ட் முகமது பின் ரஷித் அல் மக்தூம் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) ‘Collaboration for the Intelligent Age’ என்ற தலைப்பில் ஒரு குழு விவாதத்தின் போது இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து பேசுகையில், அமீரகத்தில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் வசிக்கின்றனர். அவர்கள் சமூகத்தில் மிகவும் ஒற்றுமையாக தங்களின் இரண்டாவது தாய்நாடாக அமீரகத்தை மனதில் எண்ணி வாழ்கிறார்கள், இது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு வித்தியாசமான ஒன்றாகும் எனக் கூறியுள்ளார்.
ஏனென்றால் அவர்கள் அமீரக மக்களுடன் இணைந்து வாழ அமீரகத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைய வேண்டியதில்லை, ஆனால் அவர்கள் தங்கள் சொந்த கலாச்சார அடையாளத்தையும் தங்கள் சொந்த கலாச்சார நடைமுறையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மதிக்கப்படுகிறார்கள் என்றும் ஷேக்கா லதிஃபா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளின் கலாச்சார கொண்டாட்டங்கள்
அதுமட்டுமில்லாமல், உலகம் முழுவதிலுமிருந்து துபாயில் அந்த சமூகத்தினருடன் பல்வேறு கலாச்சார கொண்டாட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கூறிய அவர், நாங்கள் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம் மற்றும் தேசிய நிகழ்வுகள் மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களையும் அவர்களுடன் இணைந்து கொண்டாடுகிறோம் என்று எடுத்துரைத்துள்ளார்.
அமீரகத்தின் முக்கிய குறிக்கோள்
அமீரக அரசாங்கத்தில், குறிப்பாக துபாய் அரசாங்கம் ஒவ்வொரு துபாய் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் முக்கியக் குறிக்கோளுடன் ஒவ்வொரு உத்தியையும் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துவதாக ஷேக்கா லதிஃபா தெரிவுத்துள்ளார்.
இது குறித்து அவர் விவரிக்கையில், “எங்கள் உத்திகள் அல்லது திட்டங்களை வகுக்கும்போது, எங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில் எல்லோரும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்த்து, சிறந்த நடைமுறைகளை மீண்டும் தரவரிசைப்படுத்தி, ஏற்கனவே அனைவரும் சாதித்ததை அடைவதாகும். இரண்டாவதாக செய்ய விரும்புவது தொழில்துறையை மறுபரிசீலனை செய்து, எங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தனியார் துறையுடனான கூட்டாண்மை
துபாய் அரசாங்கம் பொது-தனியார் கூட்டாண்மையை பெரிதும் வலியுறுத்துகிறது என்றும், இது அரசாங்கத்தின் மீது தனியார் துறையின் மிக வலுவான நம்பிக்கையை விளைவித்துள்ளது என்றும் ஷேக்கா லதீபா சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, டிஜிட்டல், AI மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு தொழில்களில் உள்கட்டமைப்பில் அரசாங்கம் முதலீடு செய்த அனைத்து முதலீடுகளின் காரணமாக, அது தனியார் துறையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன் “ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும், தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel