சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2022இல் சரியாக இதே நாளில், ஏமனின் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் அமீரகம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள முசாஃபா ICAD 3 பகுதி மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கட்டுமானப் பகுதியை குறிவைத்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பெட்ரோலிய டேங்கர்கள் வெடித்தத்துடன் மூன்று பொதுமக்கள் பலியாகினர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
ஹவுதிகள் தாக்குதல் நடத்திய இந்த இரண்டு பகுதிகளும் பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்பு ஆகும். இதனை நினைவு கூறும் விதமாக அமீரக தலைவர்கள் இது பற்றிய பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, இன்று (ஜனவரி 17ஆம் தேதி) “வலிமை, எதிர்த்தெறிதல் மற்றும் ஒற்றுமையை நினைவுகூரும் நாள்” என்று அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் இன்று X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நமது தேசம் எப்போதும் மனிதகுலம் அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும்” என்று அந்த இடுகையில் எழுதியுள்ளார்.
அதே போல் துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் மற்றும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களும், இந்த நாளில் நாட்டில் நடந்த நிகழ்வு பற்றி பதிவிட்டுள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஜனவரி 17 அன்று, அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து ஒற்றுமை, விசுவாசம், ஆதரவு மற்றும் வீரம் ஆகியவற்றின் உணர்வுகள் நினைவுகூரப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் பின்வாருமாறு எழுதியிருந்தார்: “தியாகம், கொடுப்பது மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் நிலையான மதிப்புகள் நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். அமீரகம் எப்போதும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் புகலிடமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel