அபுதாபியில் இப்போது சையத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் திரும்பும் வழிகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 30,000 பயணங்களை முடித்து பிறகு, அபுதாபி மொபிலிட்டியானது (AD Mobility) நகரம் முழுவதும் சுமார் 430,000 கி.மீ.க்கு மேல் அதன் டாக்ஸி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பயனர்கள் ‘TXAI’ அல்லது ‘Uber’ அப்ளிகேஷன்கள் மூலம் இந்த டாக்ஸிகளில் எளிதாக முன்பதிவு செய்யலாம். யாஸ் மற்றும் சாதியத் ஐலேண்ட்களில் நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து, சையத் சர்வதேச விமான நிலையத்திற்கான அணுகல் சாலைகளில் இப்போது ஓட்டுநர் இல்லாத வாகன சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிலையான இயக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான அபுதாபியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் உள்ளது. அபுதாபி மொபிலிட்டி தானியங்கி டாக்சிகளை இயக்க Space 42 மற்றும் Uber நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது, மேலும் இந்த சேவையை படிப்படியாக நகரத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
2040 ஆம் ஆண்டளவில், அபுதாபியில் 25% பயணங்கள் தானியங்கி வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும், கார்பன் வெளியேற்றத்தை 15% குறைக்க வேண்டும் மற்றும் சாலை விபத்துகளை 18% குறைக்க வேண்டும் என்பதே அபுதாபி மொபிலிட்டியின் முக்கிய இலக்காகும்.
இது குறித்து ITC செயல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் கஃப்லி அவர்கள் பேசுகையில், இந்த நடவடிக்கை அபுதாபியின் நிலையான மற்றும் மேம்பட்ட போக்குவரத்து அமைப்புக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel