துபாயில் உள்ள ஜுமேரா கடற்கரையில் ஈத் அல் அதா விடுமுறையைக் கொண்டாடும் போது, 29 வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூபா டைவிங் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஐசக் பால் ஒலக்கெங்கில் (Issac Paul Olakkengil) என்ற அந்த நபர் துபாயில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்தபோது, அவர் தனது மனைவி ரேஷ்மா மற்றும் தம்பி இவினுடன் ஸ்கூபா டைவிங் சென்றிருந்தார். குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, பயிற்சி அமர்வின் போது ஐசக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய உறவினர் பியாரிலோஸ் டேவிஸ் கூறுகையில், குடும்பத்துடன் ஸ்கூபா டைவிங்கிற்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஐசக் சரியாக சுவாசிக்க முடியாமல் குழுவிலிருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் அனைவரும் பீதியடைந்து நீருக்குள் மூழ்கியதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் ரேஷ்மா கரைக்கு மீட்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற இருவரும் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், ஐசக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை, இவின் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் டைவிங் உபகரணங்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐசக்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் குடும்பத்தினர் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் பியாரிலோஸ் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, இவினுக்கு அவரது சகோதரரின் மரணம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இரு சகோதரர்களும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. ஐசக்கும் ரேஷ்மாவும் துபாயில் வசித்து வந்தனர், அதே நேரத்தில் இவின் அபுதாபியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel