ADVERTISEMENT

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்யும் அமீரகம்!!

Published: 6 Jun 2025, 7:26 AM |
Updated: 6 Jun 2025, 7:26 AM |
Posted By: Menaka

வரக்கூடிய ஜனவரி 1, 2026 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையை ஐக்கிய அரபு அமீரகம் முழுமையாகத் தடை செய்யும் என்று அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் பைகள், ஸ்டைரோஃபோம் உணவுப் பாத்திரங்கள், மேஜை கவர்கள், காட்டன் துடைப்பான்கள், ஸ்ட்ராக்கள் மற்றும் கோப்பைகள் போன்ற சில ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 முதல், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கப், மூடிகள், கட்லரி, உணவுப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் போன்ற பொருட்களுக்கும் தடையானது விரிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவிக்கையில் “நம் வாழ்க்கையிலிருந்து தேவையற்ற பிளாஸ்டிக்கை அகற்றுவதில் நாம் அனைவரும் பங்கு வகிக்க வேண்டும். மாற்றத்தின் முகவர்களாக மாறி, நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் நிலத்தையும் கடலையும் பாதுகாக்க உதவுவோம்” என்று டாக்டர் அம்னா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

பிளாஸ்டிக் மாசுபாடு: ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்

பிளாஸ்டிக் மாசுபாடு உணவு, நீர் மற்றும் காற்றை சேதப்படுத்துகிறது என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) எச்சரித்துள்ளது. மனித நுரையீரல், தமனிகள், மூளை மற்றும் தாய்ப்பாலில் கூட மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் உடைந்து உணவுச் சங்கிலியில் நுழைந்து மனித ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

UNEP இன் படி, உலகளாவிய பிளாஸ்டிக் நுகர்வு 2024 ஆம் ஆண்டில் 516 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை 2060 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1.2 பில்லியன் டன்களாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT

மறுசுழற்சி போதாது

பிளாஸ்டிக் கழிவுகளில் 9% மட்டுமே தற்போது மறுசுழற்சி செய்யப்படுகிறது, மேலும் 21% மட்டுமே பொருளாதார ரீதியாக மறுசுழற்சி செய்யக்கூடியது என்று கருதப்படுகிறது, அதாவது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள் அதைச் செயலாக்குவதற்கான செலவை ஈடுசெய்யும் அளவுக்கு மதிப்புமிக்கது. இத்தகைய சூழலில், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கும், பசுமை உள்கட்டமைப்பு, நிலையான உணவு நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் செயல்பட்டு வருவதாக டாக்டர் அம்னா மேலும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel