அமீரகத்தில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் அபுதாபியிலும் காணப்படுகின்றது. அபுதாபியின் புள்ளிவிவர மையம் (SCAD) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் அபுதாபி மக்கள்தொகை 4,135,985 ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 7.5% அதிகரிப்பாகும். இந்த விரைவான அதிகரிப்பு, உலகளாவிய திறமை, முதலீடு மற்றும் புதுமைக்கான மையமாக எமிரேட்டின் வளர்ந்து வரும் ஈர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த தசாப்தத்தில், அபுதாபியின் மக்கள்தொகை 51% அதிகரித்துள்ளது, அதாவது கடந்த 2014 இல் அபுதாபி மக்கள்தொகை 2.7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி வலுவான பொருளாதார செயல்திறனுடன் ஒத்துப்போகிறது என கூறப்படுகின்றது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டில், அபுதாபியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 டிரில்லியன் திர்ஹம்ஸை எட்டியது என்றும், குறிப்பாக எண்ணெய் அல்லாத துறைகள் மொத்த உற்பத்தியில் 54.7% பங்களித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அபுதாபியின் அரசு செயல்படுத்தல் (Department of Government Enablement) மற்றும் SCAD துறையின் தலைவர் அகமது தமீம் அல் குட்டாப் கூறுகையில், எமிரேட்டின் அதிவேக மக்கள்தொகை வளர்ச்சியானது, சிறந்த உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒரு நிலையான, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவதில் அபுதாபியின் வெற்றியை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, புதுமை, வலுவான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் AI ஆளுகை ஆகியவற்றிற்கான எமிரேட்டின் வளர்ச்சி உலகெங்கிலும் உள்ள நிபுணர்களை ஈர்க்கும் முக்கிய காரணிகள் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குடியிருப்பாளர்களின் தேவைகளை எதிர்பார்த்து முன்பே அவர்களுக்கேற்ற சிறந்த பொது சேவைகளை வழங்கவும் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, உலகின் முதல் AI- அரசாங்கமாக மாறுவதற்கு அபுதாபி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றம் டிஜிட்டல் நிர்வாகம், கொள்கை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் திறன்களுக்கான தேவையை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பணியாளர்கள் மற்றும் முதலீடு
2024 ஆம் ஆண்டில் எமிரேட்டின் பணியாளர்கள் எண்ணிக்கை 9.1% அதிகரித்துள்ளது, AI, நிதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற அறிவு சார்ந்த துறைகளில் வலுவான வளர்ச்சியுடன் இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், இது பொருளாதார உந்துதலைத் தூண்டும் அதிக உற்பத்தி வயதுக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கைத் தரம்
எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக, 2025 இல் MENA பிராந்தியத்தில் உலகின் பாதுகாப்பான நகரமாகவும், வாழக்கூடிய மிகவும் ஏற்ற நகரமாகவும் அபுதாபி பெயர் எடுத்துள்ளது. இந்த தரவரிசைகள், அபுதாபியை மக்கள் வாழவும் வேலை செய்யவும் விரும்பும் இடமாக மாற்றுவதற்கான எமிரேட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel