2024 ஆம் ஆண்டின் இறுதியில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் என்றழைக்கப்படும் GCC நாடுகளின் மக்கள் தொகையானது 61.2 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது 2023 உடன் ஒப்பிடும்போது 2.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உயர்வை குறிக்கிறது என்று வளைகுடா அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு கவுன்சிலின் புள்ளிவிவர மையத்தின் (GCC-Stat) புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக மக்கள்தொகை தினத்தை (ஜூலை 11) ஒட்டி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து இப்பகுதி விரைவான மக்கள்தொகை அதிகரிப்பை எதிர்கொண்டு வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றது. அதாவது கடந்த 2021 முதல், மொத்த மக்கள் தொகையானது 7.6 மில்லியன் எனும் இமாலய அளவில் அதிகரித்துள்ளது, இது மூன்று ஆண்டுகளில் 14.2% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும், GCC மக்கள் தொகை இப்போது உலகின் மொத்த மக்கள்தொகையில் 0.7% ஆகும், இதில் ஆண்கள் 62.8% (38.5 மில்லியன்) மற்றும் பெண்கள் 37.2% (22.7 மில்லியன்) உள்ளனர் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 169 ஆண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது, இது 100 பெண்களுக்கு 101 ஆண்கள் என்ற உலகளாவிய சராசரியை விடவும் அதிகமாகும்.
GCC நாடுகளில் அதிகரித்து வரும் மக்கள்தொகை உயர்வானது, தொற்றுநோயின் விளைவாக ஏற்பட்ட தாக்கத்திலிருந்து GCC வேகமாக மீள்வதை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், GCC உறுப்பு நாடுகளில் தொடர்ச்சியான பொருளாதார விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகை இயக்கம் வேகமாக அதிகரித்து வருவதையும் இது எடுத்துக்காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel