உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் பயணத்தை எளிதாக்க பல்வேறு நவீன வசதிகளை துபாய் ஏர்போர்ட் செயல்படுத்தி வருகின்றது. அத்துடன் புதிய தூயில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இனி துபாய் ஏர்போர்ட்டின் பயணம் செய்வதை மிகவும் எளிதாக்கும் வகையில் மற்றுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், எலெக்ட்ரானிக் சாதனங்கள் அல்லது தண்ணீர் பாட்டில்களை அகற்ற வேண்டிய அவசியமின்றி பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து செல்லும் நடைமுறை விரைவில் வரவிருக்கிறது.
ஏனெனில், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், புதிய மேம்பட்ட 3D ஸ்கேனர்கள் மற்றும் AI-இயங்கும் அமைப்புகள் விமான நிலையத்தின் மூன்று டெர்மினல்களிலும் தற்போதைய பேக்கேஜ் ஸ்கிரீனிங் செயல்முறையை முழுமையாக மாற்றும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து துபாய் விமான நிலையங்களில் டெர்மினல் செயல்பாடுகளுக்கான மூத்த துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், இந்த மாற்றம் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகளை வேகமாகவும், மென்மையாகவும், மன அழுத்தமில்லாததாகவும் மாற்றும் என்று விளக்கினார். எனவே, பயணிகள் இனி கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருந்து லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வேண்டியதில்லை. அதேபோல், 100 மில்லிக்கு மேல் உள்ள திரவங்கள், வாசனை திரவியங்கள், கிரீம்களும் பைகளுக்குள் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
இந்த அதிநவீன தொழில்நுட்பம் உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D படங்களை வழங்குகிறது, இதனால் பயணிகள் தங்கள் பேக்கேஜ்களை திறக்க வேண்டிய அவசியமின்றி பாதுகாப்பு அதிகாரிகள் பைகளை முழுமையாக ஸ்கேன் செய்ய முடியும். கடந்த மே 2025-இல், துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் இந்த புதிய அமைப்பை அறிமுகப்படுத்த ஸ்மித்ஸ் டிடெக்ஷனுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியது, இது தற்போது டெர்மினல் 3 (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸால் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படுகிறது) இல் சோதிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே நேரத்தில் ஒரு பக்கம் DXB இல் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 46 மில்லியன் பயணிகளை விமான நிலையம் வரவேற்றுள்ளது. எனவே, இந்த வளர்ச்சியை நிர்வகிக்க, காத்திருப்பு நேரங்களைக் குறைக்கவும், விமானங்களை விரைவுபடுத்தவும், அதிக பயணிகளை தடையின்றி கையாளவும் துபாய் விமான நிலையங்கள் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் AI-இயக்கப்படும் தீர்வுகளில் முதலீடு செய்கின்றன. இந்த மேம்படுத்தலில் சுமார் 140 ஸ்க்ரீனிங் இயந்திரங்களை மாற்றுவது அடங்கும், இதற்கு பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதால், இந்த அமைப்பை வெளியிட 2026 வரை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது முடிந்ததும், அடுத்த தலைமுறை விமான நிலைய பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் சில முக்கிய உலகளாவிய மையங்களின் வரிசையில் துபாய் சேரும், இது DXB ஐ மிகவும் பரபரப்பானது மட்டுமல்லாமல் உலகின் பயணிகளுக்கு ஏற்ற விமான நிலையங்களில் ஒன்றாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel