ஓமானில் உள்ள சுவைக் விலாயத்தில் (Wilayat of Suwaiq) பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்த பின்னர் இருவர் பலியான சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து ராயல் ஓமன் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டிலில் அடைக்கப்பட்ட மாசுபட்ட நீரைக் குடித்ததில் ஓமன் நாட்டை சேர்ந்த குடிமகனும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
மாசடைந்த தண்ணீரைக் குடித்ததின் விளைவு, அந்த வெளிநாட்டுப் பெண் செப்டம்பர் 29 அன்று காலமான நிலையில், குடும்பத்தினருடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓமானிய நபர் இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அக்டோபர் 1 அன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பாட்டில் தண்ணீரால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஓமன் நாட்டை சேர்ந்த பெண் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Uranus Star‘ என்ற ஈரானிய பிராண்டின் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பாதிக்கப்பட்டவர்கள் குடித்த பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆய்வக சோதனைகளில் தண்ணீர் மாசுபட்டிருப்பது தெரியவந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஓமன் முழுவதும் உள்ள சந்தைகளில் இருந்து இந்த பிராண்டின் அனைத்து பாட்டில்களையும் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானில் இருந்து அனைத்து பாட்டில் தண்ணீரையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துயர சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் மாசுபட்ட பிராண்டை உட்கொள்வதைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அல்லது பாதுகாப்பற்ற நீர் தயாரிப்புகளை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel