அமீரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, திப்பா அல்-ஃபுஜைராவில் உள்ள ஒரு தனியார் பண்ணையில், இரண்டு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. அந்த குடும்பத்தினர் தங்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை சந்திப்புக்காக அங்கு கூடியிருந்த நிலையில், இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
விபத்து நடந்தபோது குழந்தை நீச்சல் குளத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், குடும்பத்தினரின் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஒரு சிறிய கணம் ஏற்பட்ட கவனக்குறைவு மரணத்தை ஏற்படுத்தியதாகவும் குடும்பத்தினர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, குளத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குறித்து எப்போதும் கவனமாக இருந்ததாகவும் நீச்சல் குளத்தின் வாயில் எப்போதும் பூட்டப்பட்டு, குழந்தைகள் அதை அடைய முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அன்று மாலை, பெரியவர்களில் ஒருவர் ஏதோ ஒன்றை எடுக்க கேட்டை லேசாகத் திறந்து வைத்த சமயத்தில் குழந்தை கவனிக்கப்படாமல் உள்ளே நுழைந்திருக்க வேண்டும் என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், குளம் ஆழமாக இல்லை, தாழ்ப்பாள் உயரமாக வைக்கப்பட்டுள்ளது, அதனால் குழந்தைகள் அதைத் திறக்க முடியாது. ஆனால் குழந்தை பராமரிப்பாளரின் அந்த சில வினாடிகள் கவனச்சிதறல் குழந்தையின் உயிரை பறித்து விட்டது என்று கூறப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனை மீட்டு, திப்பா அல்-புஜைரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு மருத்துவர்கள் குழந்தையை உயிர்ப்பிக்க தீவிரமாக முயற்சித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. “நாங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தோம், ஆனால் ஒரு கண கவனக்குறைவு கூட இழப்புக்கு வழிவகுக்கும் என்பதை இது காட்டுகிறது.” என்று சிறுவனின் மாமா தெரிவித்துள்ளார்.
சிறுவனை நினைவு கூர்ந்த அவர் கண்ணீருடன் மேலும் கூறியதாவது, “நாங்கள் ஒரு இனிமையான, மகிழ்ச்சியான ஆன்மாவை இழந்தோம். அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார், அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார். அவர் இல்லாதது எங்கள் இதயங்களில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொர்க்கத்தில் இளைப்பாற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகக் காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நீர் மற்றும் நீச்சல் பகுதிகளில் விழிப்புடன் இருக்க பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கூடுதலாக, விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவர்கள் தொடங்கியுள்ளனர், குடும்பங்கள் குழந்தைகளை நெருக்கமாக கண்காணிக்கவும், வீட்டு நீச்சல் குளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவவும் வலியுறுத்துகின்றனர்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
இதுபோன்ற துயரங்களைத் தடுக்க, குடும்பங்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது:
- நீச்சல் குளங்களைச் சுற்றி வேலிகள் அல்லது தடுப்புகளை நிறுவவும்.
- நீச்சல் குளப் பகுதியைச் சுற்றி வழுக்காத தரையை உறுதி செய்யவும்
- பொம்மைகள், மிதவைகள் மற்றும் உபகரணங்களை பயன்பாட்டில் இல்லாதபோது தண்ணீரிலிருந்து விலக்கி வைக்கவும்.
- சிறு குழந்தைகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் மிதக்கும் சாதனங்களை வழங்கவும்.
- நீச்சல் குளப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து கதவுகளையும் மூடி பூட்டவும்.
- சிறிது நேரம் கூட குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel