ஐக்கிய அரபு அமீரகமானது பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் உலகின் முதல் நான்கு நாடுகளில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வலுவான சாலைப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கான அமீரகத்தின் ஒருங்கிணைந்த தேசிய முயற்சிகளுக்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
அபுதாபியில் உள்ள அமைச்சகத்தின் தலைமையகத்தில் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ‘Happiness and Positivity Council’ கூட்டத்தின் போது இந்த சாதனை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது, அரசாங்க செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அனைத்துத் துறைகளிலும் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் நடந்து வரும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து கவுன்சில் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை உயர்விற்கு ஏற்ப சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பது, குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தலைமையின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய முன்னுரிமைகளில் அடங்கும்.
இந்தக் கூட்டத்தில் துபாய் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் தமீம்; உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் கலீஃபா ஹரேப் அல் கைலி; துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி; மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த பாதுகாப்புத் தலைவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel