துபாயைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், அல் குத்ரா சைக்கிளிங் பாதையில் ஏற்பட்ட ஒரு சிறிய சேதத்தை அதிகாரிகளிடம் சாதாரணமாகப் புகாரளித்த 12 மணி நேரத்திற்குள் அந்த சாலை பழுது சரிசெய்யப்பட்ட நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், ட்ரோன் மூலம் அந்தப் பகுதியைக் கண்காணித்த ரோந்துக் குழு, சைக்கிள் ஓட்டுநரிடம் பாதை குறித்து ஏதேனும் கவலைகள் உள்ளதா என்று கேட்டபோது இந்த சம்பவம் தொடங்கியது. அவருக்கு எந்தப் பெரிய புகாரும் இல்லை என்றாலும், சாலை மேற்பரப்பில் ஒரு சிறிய வெடிப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் அவர் அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அபுதாபிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, மீண்டும் அதே வழியில் திரும்பி வரும் போது, தொழிலாளர்கள் சிலர் அவர் முன்னர் குறிப்பிட்ட இடத்தில் பழுதுபார்ப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், அங்கு சென்று அவர்களிடம் விசாரித்த போது, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாய் காவல்துறையினரிடமிருந்து அறிக்கையைப் பெற்ற பிறகு சிக்கலை சரிசெய்ய ஒரு குழுவைத் திரட்டியிருப்பதை அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துபாய் காவல்துறை, RTA மற்றும் கட்டுமானக் குழுவினருக்கு இடையேயான தடையற்ற தகவல்தொடர்பை பாராட்டிய அவர், அவர்கள் இணைந்து சில மணி நேரங்களுக்குள் பிரச்சினையைத் தீர்த்தனர் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் அவர், “துபாயில் மட்டுமே அவர்களால் இவ்வளவு விரைவாக செயல்பட முடியும்,” என்று தனது பகிரப்பட்ட வீடியோவில் குறிப்பிட்டதுடன், அனைத்து சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பான பாதைகளை உறுதி செய்ததற்காக அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel