ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கனமழை, இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை என சமீபத்திய நாட்களாக நிலவிய நிலையற்ற வானிலைக்குப் பிறகு, நாட்டில் பனிப்பொழிவு ஏற்படுமா என்று பல குடியிருப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர் .
அண்மையில், சவூதி அரேபியாவின் சில பகுதிகளில் அரிய பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றது. பாலைவனம் மற்றும் மலைப் பகுதிகள் வெண்மையாகக் காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் தீயாய்ப் பரவின. வளைகுடா நாடுகளில் பனிப்பொழிவு என்பது மிகவும் அசாதாரணமான ஒன்றாக இருந்தாலும், சமீபத்திய நிகழ்வுகள் அது சாத்தியமற்றது அல்ல என்பதை குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளன.
சவூதி பத்திரிகை வெளியிட்டதன் படி, டிசம்பர் 18 அன்று, குளிர்ந்த காற்று இப்பகுதிக்குள் நகர்ந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது. ரியாத்திற்கு வடக்கே உள்ள அல் மஜ்மா மற்றும் அல் காத் ஆகிய இடங்களிலும், வடமேற்கில் உள்ள ஜபல் அல் லாஸ் போன்ற உயரமான பகுதிகளிலும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை சில பகுதிகளில் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸுக்கும் கீழே கடுமையாகக் குறைந்ததும் மழை மேகங்களுடன் கூடிய இடி மேகங்களும் சேர்ந்ததே இந்தப் பனிப்பொழிவுக்குக் காரணம் என்று கூறியுள்ளது. பனி மற்றும் வழுக்கும் சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதேபோன்ற நிலைமைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பனிப்பொழிவைக் கொண்டுவருமா என்றால், பனிப்பொழிவு ஏற்பட மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் தேவை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஒரு வானிலை ஆய்வாளர், வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில், பொதுவாக உயரமான பகுதிகளில், வெப்பநிலை கணிசமாகக் குறையும்போது மட்டுமே பனி உருவாக முடியும் என்று விளக்கியுள்ளார். “இந்த நிலைமைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரிதானவை, அதனால்தான் நாம் பொதுவாக பனிக்கு பதிலாக ஆலங்கட்டி மழையைக் காண்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் குளிர்காலத்தில், பல வானிலை நிகழ்வுகள் நாடு முழுவதும் பனி போன்ற காட்சிகளை உருவாக்கின. கடுமையான மழைப் புயல்களின் போது, ஆலங்கட்டி மழை பாலைவனத்தின் சில பகுதிகளை மூடி, மணல் பகுதிகளை வெண்மையாக மாற்றியது. இதனால் பல குடியிருப்பாளர்கள் அந்தக் காட்சியை பனிப்பொழிவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அத்துடன் குளிர்ந்த காலங்களில், அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமாவில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு அருகில் குறைந்தது, மலைப் பகுதிகளில் உறைபனி மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பனிப்பொழிவு என்பது அரிதான ஒன்றாக இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன்பும் பனிப்பொழிவை அனுபவித்துள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று ஜனவரி 24, 2009 அன்று நடந்தது. நாட்டின் மிகக் குளிரான இரவுகளில் ஒன்றைத் தொடர்ந்து, ராஸ் அல் கைமாவில் உள்ள ஜபல் ஜெய்ஸின் சில பகுதிகள் பனியால் மூடப்பட்டன. வெப்பநிலை சுமார் -3 டிகிரி செல்சியஸாகக் குறைந்து, சுமார் 5,700 அடி உயரத்தில் பனிப்பொழிவு பதிவாகியது, சில பகுதிகளில் பனியின் ஆழம் 20 சென்டிமீட்டர் வரை எட்டியது. 2020 ஆம் ஆண்டில் ஜெபல் ஜெய்ஸில் மற்றொரு லேசான பனிப்பொழிவு பதிவாகியது. NCM இந்த நிகழ்வுக்கு அழுத்த அமைப்புகளிலும் மேல் காற்று நிலைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களே காரணம் என்று கூறியிருந்தது.
அதே சமயம் தற்போதைய சூழ்நிலைக்கு வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், இப்போதைக்கு, குளிர்கால வானிலை அமைப்புகளின் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழையே அதிகம் காண வாய்ப்புள்ளது என்றும் பனிப்பொழிவு மிக அரிதென்றும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel