துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், X நிறுவனத்தின் உரிமையாளரும் டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியுமான தொழில்நுட்ப தொழில்முனைவோர் எலான் மஸ்க்கை, நாத் அல் ஷபாவில் உள்ள தனது மஜ்லிஸில் சந்தித்துள்ளார். பின்னர், இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு புகைப்படத்தில், ஷேக் ஹம்தான் வாகனம் ஓட்ட, மஸ்க் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
அந்தப் படங்களைப் பகிர்ந்துகொண்டு, ஷேக் ஹம்தான் எழுதியிருந்ததாவது; “விண்வெளி, தொழில்நுட்பம் மற்றும் மனிதகுலம் குறித்து எலான் மஸ்க்குடனான ஒரு விரிவான கலந்துரையாடலை நான் முழுமையாக ரசித்தேன். எதிர்காலம் என்ன கொண்டுவரப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் X தள பதிவில், ஷேக் ஹம்தான், இந்தச் சந்திப்பு, நாட்டையும் உலகளாவிய பொருளாதாரத் தலைவர்களையும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களையும் ஒன்றிணைக்கும் கூட்டாண்மைகளில் ஐக்கிய அரபு அமீரகம் கொள்ளும் பெருமையை எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ளார். ஒத்துழைப்பே முன்னேற்றத்தின் உண்மையான உந்துசக்தி என்றும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் ஐக்கிய அரபு அமீரகம் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது X தளத்தில் “உங்களின் சிறந்த நாட்டில் எனக்கு அளித்த விருந்தோம்பலுக்கு நன்றி” என பகிர்ந்துள்ளார்.
மக்களை மையமாகக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்திலும் உலகெங்கிலும் உள்ள எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு நிலையான வளர்ச்சி மாதிரி மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உலகளாவிய மையமாக தனது நிலையை வலுப்படுத்த துபாய் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எலான் மஸ்க் உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டில் ‘துபாய் லூப்’ திட்டத்தை வெளியிட்டார். 17 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை போக்குவரத்து அமைப்பில் 11 நிலையங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு மணி நேரத்திற்கு 20,000 பயணிகளை நேரடி, இடைநில்லாப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களால் இயக்கப்படும் மற்றும் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய துபாய் லூப், நகர்ப்புற போக்குவரத்தை மாற்றுவதற்கான அமீரகத்தின் தொலைநோக்குப் பார்வையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹம்தான் இந்தத் திட்டத்தை துபாயில் “போக்குவரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் ஒரு திட்டம்” என்று விவரித்துள்ளார். மேலும், இந்த நகரம் தரைக்கு மேலும் கீழும் உள்ள போக்குவரத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்து, புதுமைகளுக்கான உலகளாவிய அளவுகோல்களை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் லூப் 2026-ல் செயல்பாட்டிற்கு வரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் தகவலின்படி, ஒரு மூத்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சர், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் வாகன ஓட்டிகள் இந்த எதிர்கால போக்குவரத்து அமைப்பை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டம், துபாய் முழுவதும் சுரங்கப்பாதை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நிலையான, மின்சாரத்தால் இயங்கும் போக்குவரத்தை ஆதரிக்கும் அதே வேளையில், இடைநில்லாப் பயணத்துடன் வேகமான, திறமையான பயணத்தை சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel