ADVERTISEMENT

துபாய்: காரை ஓட்டிச் செல்லும் போது திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்.!! தடுப்பில் மோதி கார் விபத்து.!!

Published: 23 Dec 2025, 8:08 PM |
Updated: 23 Dec 2025, 8:08 PM |
Posted By: Menaka

துபாயின் பிரதான சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (E311) நடந்த ஒரு கார்விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் சுயநினைவை இழந்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளின் படி, அந்தக் கார் சாலையிலிருந்து விலகி ஒரு கான்கிரீட் தடுப்பில் மோதியதில் காரில் இருந்தவர்களுக்கு மிதமான முதல் கடுமையான காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் துபாய் காவல்துறையின் போக்குவரத்து ரோந்துப் பிரிவினர் மற்றும் விபத்து விசாரணை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்ததாகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், மீட்புக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டதாகவும், சேதமடைந்த வாகனம் அகற்றப்பட்டு இயல்பு நிலை போக்குவரத்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதீத சோர்வு, தூக்கக் கலக்கம் அல்லது குறைந்த அல்லது அதிக இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், மனநலக் கோளாறுகள் அல்லது திடீர் சுயநினைவு இழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும்போது வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு சாதாரண அறிகுறிகளைக் கூட புறக்கணிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர், ஏனெனில் அவை விரைவாக கடுமையான அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு வழிவகுக்கும். வாகனம் ஓட்டும்போது சுயநினைவை இழப்பது விபத்துக்களுக்கான மிகவும் ஆபத்தான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் ஓட்டுநர்கள் சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

ADVERTISEMENT

எனவே வாகன ஓட்டிகள், குறிப்பாக நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அல்லது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீண்ட பயணங்களின்போது அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும், தலைசுற்றல், சோர்வு அல்லது உடல்நிலை சரியில்லாமல் உணர்ந்தால் உடனடியாக வாகனம் ஓட்டுவதை நிறுத்துமாறும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel