துபாய் காவல்துறையுடன் இணைந்து உலகளாவிய ஆலோசனை நிறுவனமான EY நடத்திய ஒரு புதிய ஆய்வின்படி, துபாயின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் திறமையான நீதி அமைப்பு ஆகியவை குறைந்த குற்ற விகிதம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. மேலும், இது அமீரகத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை அன்று ஸ்கை நியூஸ் அரேபியாவால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக துபாய் காவல்துறை மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் எவ்வாறு கணிசமான பொருளாதார நன்மைகளாக மாறியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வரும் குற்ற விகிதங்கள் துபாயின் பொருளாதாரத்திற்கு 63.9 பில்லியன் திர்ஹம் முதல் 102.3 பில்லியன் திர்ஹம் வரை ஆதரவளித்துள்ளதாகவும், இது 2024 ஆம் ஆண்டில் அமீரகத்தின் பொருளாதாரத்தில் 14 முதல் 23 சதவீதத்திற்கு சமம் என்றும் அந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
பாதுகாப்பு மற்றும் நீதி அமைப்பிற்குள் ஒரு முக்கிய நிறுவனமாக, துபாய் காவல்துறை ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) நேரடியாக 31.8 பில்லியன் திர்ஹம் முதல் 50.9 பில்லியன் திர்ஹம் வரை பங்களிக்கிறது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. இது துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 முதல் 11 சதவீதம் ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 1, 1956 அன்று நிறுவப்பட்ட துபாய் காவல்துறை, இப்பகுதியின் மிகவும் மேம்பட்ட சட்ட அமலாக்க அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. நைஃப் கோட்டையில் (Naif Fort) அதன் ஆரம்பகால செயல்பாடுகள் முதல் 1973 இல் நிறுவப்பட்ட அதன் நவீன தலைமையகம் வரை, இந்த துறை புதுமையான காவல் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றத் தடுப்புக்கு அப்பாற்பட்டு, சமூக நம்பிக்கையை வலுப்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கான விருப்பமான உலகளாவிய இடமாக துபாயை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் துபாய் காவல்துறை ஒரு பரந்த பங்கை வகிக்கிறது என்றும் EY ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, துபாயின் பாதுகாப்பான சூழல் சுற்றுலாவின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது, இது ஆண்டுதோறும் 7 முதல் 12 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. துபாய் காவல்துறையின் பங்களிப்பு மட்டும் 4 முதல் 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு, அதாவது மொத்த வருகையில் 19 முதல் 33 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகரின் வலுவான பாதுகாப்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், துபாயின் பாதுகாப்புக்கான நற்பெயர், கூடுதலாக 3.6 பில்லியன் திர்ஹம் முதல் 5.8 பில்லியன் திர்ஹம் வரை வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்க உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் துபாய் காவல்துறையின் பங்கு 1.8 பில்லியன் திர்ஹம் முதல் 2.9 பில்லியன் திர்ஹம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 1 முதல் 2 சதவீதம் ஆகும்.
தரவு அடிப்படையிலான பகுப்பாய்வு
உலகின் மிகப்பெரிய தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான EY, 1995 முதல் 2021 வரையிலான 50 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஒரு பொருளாதார அளவியல் பகுப்பாய்வைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் ஆய்வு முடிவில், பாதுகாப்பு என்பது ஒரு சமூகத் தேவை மட்டுமல்ல, அது ஒரு சக்திவாய்ந்த பொருளாதார உந்துசக்தி என்றும் அந்த அறிக்கை கூறியது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு என்பது வெறும் ஒரு சமூகத் தூண் மட்டுமல்ல, அது துபாயை வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் ஒரு கவர்ச்சிகரமான இடமாக வலுப்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதார உந்துசக்தியாகும் ” என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், அமீரகத்தின் நிலையான வளர்ச்சியில் துபாய் காவல்துறையை ஒரு மைய சக்தியாக அது சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel