உலகின் பல நாடுகளிலும் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், 2025-ஆம் ஆண்டில் மட்டும் பல நாடுகளில் இருந்து 24,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் 81 நாடுகள் மற்றும் நகரங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) மாநிலங்களவையில் பகிர்ந்த தரவுகளின்படி தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் சவூதி அரேபியா நாட்டிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ரியாத்தில் இருந்து 7,019 பேரும், ஜித்தாவில் இருந்து 3,865 பேரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் சவுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,884 ஆக உள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் கடுமையான குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அந்த ஆண்டில் 3,812 இந்தியர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் 2025-ல் 1,469 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
அமீரகத்தில் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த வருடாந்திர எண்ணிக்கையாகும். இதன் மூலம் 2021 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 3,979 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2024-ல் 899 பேர், 2023-ல் 666 பேர், 2022-ல் 587 பேர் மற்றும் 2021-ல் 358 பேர் என நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட மற்ற நாடுகளில் மலேசியா (1,485), பஹ்ரைன் (764), இலங்கை (372), தாய்லாந்து (481), இங்கிலாந்து (203), கனடா (188), ஜார்ஜியா (133) மற்றும் ஆஸ்திரேலியா (34) ஆகியவையும் அடங்கும்.
நாடு கடத்தப்படுவதற்கான பொதுவான காரணங்கள்
விசா காலாவதியான பிறகும் தங்கியிருப்பது, முறையான அனுமதி இல்லாமல் வேலை செய்வது, தொழிலாளர் சட்டங்களை மீறுவது, போலி வேலை வாய்ப்புகள், முதலாளிகளிடமிருந்து தப்பி ஓடுவது மற்றும் சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளில் ஈடுபடுவது ஆகியவை நாடு கடத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, போலி வேலை மோசடிகள் குறித்து அமைச்சகம் அவ்வப்போது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள போலி வேலை மோசடிகள் குறித்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்குவதாகக் கூறியுள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி, இந்தியத் தூதரகங்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், 3,500-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முகவர்கள் இந்தியாவின் இ-மைக்ரேட் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தும் செயல்முறை மற்றும் ஆதரவு
குடியுரிமைச் சரிபார்ப்பு அல்லது பயண ஆவணங்கள் தேவைப்பட்டால் தவிர, சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது குறித்த தகவல்களைப் பல நாடுகள் பகிர்வதில்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக, நாடுகடத்தும் நடைமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன, மேலும் பல சந்தர்ப்பங்களில், அவசரகாலப் பயண ஆவணங்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தியத் தூதரகங்கள் தொடர்பு கொள்ளப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel