பல வருட தாமதங்களுக்குப் பிறகு சவுதி அரேபியாவின் ஜித்தா டவரின் கட்டுமானம் அதிவேகமாக நடைபெற்று வருவதால், உலகளாவிய வானுயரக் கட்டிடங்களின் வரையறையை மாற்றியமைப்பதற்கான சவூதி அரேபியாவின் முயற்சி வேகம் பெற்று வருகிறது. ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள இந்த மாபெரும் திட்டம் நீண்ட கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனவரி 2025 இல் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. இப்போது இது உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற போட்டியில் அந்த நாட்டை மீண்டும் உறுதியாக நிறுத்துகிறது.
முன்னர் கிங்டம் டவர் (kingdom tower) என்று அழைக்கப்பட்ட இந்தக் கட்டிடம், கட்டி முடிக்கப்பட்டதும் துபாயின் புர்ஜ் கலிஃபாவை விஞ்சி, உலகின் மிக உயரமான கட்டிடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அறிக்கைகளின்படி, கட்டுமானக் குழுக்கள் தற்போது ஒவ்வொரு மூன்று முதல் நான்கு நாட்களுக்கும் ஒரு புதிய தளத்தை சேர்த்து வருகின்றன. மேலும், 2028-ஆம் ஆண்டுக்குள் கட்டுமானத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல வருட தாமதத்திற்குப் பிறகு விரைவான முன்னேற்றம்
ஆகஸ்ட், 2025 நிலவரப்படி, கட்டிடம் சுமார் 75 தளங்களை எட்டியுள்ளது. கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக, அந்த இடத்தில் பல கிரேன்கள் இயங்கி வருகின்றன. உயரங்களுக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல மேம்பட்ட கான்கிரீட் பம்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது கட்டிடத்தின் மையப் பகுதியில் பணிகள் விரைவாக நடைபெற அனுமதிக்கிறது.
நிதிச் சிக்கல்கள் மற்றும் பெருந்தொற்று காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணிகள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டதாக டெவலப்பர்கள் உறுதிப்படுத்தினர். இது இந்த முக்கிய கட்டிடத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளது.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், இந்த ஜித்தா டவரில் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் நிகழ்வுக்கான இடங்களைக் கொண்ட ஐந்து அடுக்கு தளம் இடம்பெறும். இது ஒரு பல்நோக்கு இடமாகவும், ஒரு கட்டிடக்கலைச் சின்னமாகவும் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜித்தா டவர், சவூதி அரேபியா தனது பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்தவும், விஷன் 2030 திட்டத்தின் கீழ் சுற்றுலா, புதுமை மற்றும் முதலீட்டிற்கான உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்தவும் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு முக்கிய சின்னமாகும். இந்தத் திட்டம், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் சாதனை படைக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் மீது சவூதி அரசின் வளர்ந்து வரும் கவனத்தை பிரதிபலிக்கிறது என கூறப்படுகின்றது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel