ஆயிரக்கணக்கான ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் நீண்ட புத்தாண்டு விடுமுறை மற்றும் குளிர்கால விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் பயணிகள் போக்குவரத்தில் கூர்மையான அதிகரிப்பை எதிர்கொள்கின்றன.
அதுமட்டுமல்லாமல், வரவிருக்கும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் தங்களின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு ஷார்ஜா விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 28) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், ஷார்ஜாவின் வார இறுதி விடுமுறை வெள்ளிக்கிழமை அன்றும், புத்தாண்டு விடுமுறை வியாழக்கிழமை அன்றும் வருவதால், குடியிருப்பாளர்கள் நீட்டிக்கப்பட்ட விடுமுறையை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த உச்சகட்ட குளிர்கால பயணக் காலத்தில், பயணிகள் போக்குவரத்திலும் தினசரி விமானச் செயல்பாடுகளிலும் ஒரு கூர்மையான அதிகரிப்பு இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகையால், ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், சிட்டி செக்-இன் சேவையைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சேவை, பயணிகள் செக்-இன் நடைமுறைகளை முன்கூட்டியே முடிக்கவும், விமான நிலையத்திற்கு வந்தவுடன் நேரடியாக பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லவும் அனுமதிக்கிறது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வரிசைகளில் காத்திருப்பதையும் தவிர்க்க உதவுகிறது.
அத்துடன் இத்தகைய பரபரப்பான காலத்தில் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க ஷார்ஜா விமான நிலையம் முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக, பயணிகளின் சீரான போக்குவரத்தையும் உயர் சேவைத் தரத்தையும் உறுதிசெய்ய பல செயல்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சுய-செக்-இன் கியோஸ்க்குகள், லக்கேஜ்களை ஒப்படைக்கும் வசதிகள், ஸ்மார்ட் கேட்கள், ஃபாஸ்ட்-ட்ராக் சேவைகள் மற்றும் ஹலா சேவை (hala service) ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, விமான நிலையம் பிரதான புறப்படும் நுழைவாயிலில் புதிய அல் தியாஃபா ஓய்வறையையும் (Al Diyafah Lounge) திறந்துள்ளது. இது மேம்படுத்தப்பட்ட வசதியையும் பிரீமியம் விருந்தோம்பலையும் வழங்குகிறது. இவை தவிர, புறப்படும் மற்றும் வரும் பயணிகளுக்கான செயல்முறைகளை விரைவுபடுத்த, முக்கிய செயல்பாட்டுப் பகுதிகளில் கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
குளிர்கால விடுமுறை காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. துபாய் சர்வதேச விமான நிலையமும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் DXB வழியாகப் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 1, 2026, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பொது விடுமுறை நாளாகும். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2, வெள்ளிக்கிழமையன்று வீட்டிலிருந்து பணிபுரிவார்கள். இதுவும் இந்தக் காலகட்டத்தில் பயணத் தேவை அதிகரிப்பதற்கு மேலும் பங்களிக்கிறது என பயணத்துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel