ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை முதல் நிலையற்ற வானிலை நிலவும்..!! தேசிய வானிலை மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை.!!

Published: 13 Dec 2025, 8:12 PM |
Updated: 13 Dec 2025, 8:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கோடைகாலம் முடிந்து தற்போது குளிர்காலம் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் நாட்டின் வெப்பநிலையும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கணிசமாக குறைந்து குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் வாரத்தில் நாட்டில் நிலையற்ற வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை 13°C வரை குறையக்கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது, வரும் வாரத்தில் நாடு முழுவதும் மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை என நிலையற்ற வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கையின் படி, நாளை டிசம்பர் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இந்த வாரத்தின் அதிக மழை பெய்யும் நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, நாளைய தினம் விடுமுறை என்பதால் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு திட்டமிடும் குடியிருப்பாளர்களும் குடும்பத்தினரும் எச்சரிக்கையாக இருக்குமாறும், நிலையற்ற வானிலையால் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்குத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14

ஞாயிற்றுக்கிழமை இந்த வாரத்தின் அதிக மழை பெய்யும் நாளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வெப்பநிலை சுமார் 13°C ஆகக் குறையும், அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25°C வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், காற்று லேசானது முதல் மிதமான வடமேற்கு திசையிலிருந்து வீசி, பின்னர் தென்கிழக்குக் காற்றாக மாறி,சில நேரங்களில் புத்துணர்ச்சியூட்டும் வேகத்தில் இருந்து பலத்த காற்றாக வீசி, மணிக்கு 45 கி.மீ வேகத்தை எட்டி, புழுதியைக் கிளப்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளைப் பொறுத்தவரை, அரபிக்கடலில் லேசானது முதல் மிதமானதாகவும், சில நேரங்களில் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமானதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, டிசம்பர் 15

திங்கட்கிழமை, வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, லேசானது முதல் மிதமான தென்கிழக்கு முதல் வடகிழக்குக் காற்று வீசி, சில நேரங்களில் வேகம் அதிகரித்து, மணிக்கு 10 – 25 கி.மீ வேகத்தில் வீசி, 40 கி.மீ வேகத்தை எட்டும் என்றும் மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், அரபிக்கடலில் லேசானது முதல் மிதமானது வரையிலும், அவ்வப்போது கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமானது வரையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், டிசம்பர் 16

செவ்வாய்க்கிழமை அன்று பொதுவாக மேகமூட்டமான வானிலையுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 15°C முதல் 27°C வரை இருக்கும், அதே நேரத்தில் காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசி, புழுதியைக் கிளப்பக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரபிக்கடல் மற்றும் ஓமன் கடலில் கடல் நிலவரம் மிதமானது முதல் கொந்தளிப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே வரவிருக்கும் நாட்களில் சீரற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel