நடப்பாண்டில் அமீரகம் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் போக்குவரத்தில் கணிசமாக அதிக நேரத்தைச் செலவிட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. சமீபத்திய அறிக்கைகளில், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிக வாகனங்கள் காரணமாக சாலை பயன்பாடு அதிகரித்ததால் 45 மணிநேரம் வரை வாகன ஓட்டிகள் நெரிசலில் நேரத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க வேர்ல்டோமீட்டர்ஸ் படி, நாட்டின் மக்கள் தொகையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மில்லியன் அதிகரித்து, 11.48 மில்லியனை எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
INRIX 2025 உலகளாவிய போக்குவரத்து அறிக்கை படி, அமீரக நகரங்களில் உள்ள ஓட்டுநர்கள் 2025 ஆம் ஆண்டில் போக்குவரத்து நெரிசலில் 8 முதல் 45 மணிநேரம் இழந்தனர் என்றும், கடந்த ஆண்டு இது 8 முதல் 35 மணிநேரம் ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய தேசிய சாலை விரிவாக்கம்
இவ்வாறு வளர்ந்து வரும் சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக, அமீரக அதிகாரிகள் இயக்கத்தை மேம்படுத்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமீரக அரசாங்க வருடாந்திர கூட்டங்களின் போது, 2030க்குள் முடிக்கப்படும் தேசிய போக்குவரத்து மற்றும் சாலை திட்டங்களின் 170 பில்லியன் திர்ஹம் தொகுப்பை எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய் அறிவித்தார். அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கூட்டாட்சி சாலை செயல்திறனை 73% அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
முக்கிய விரிவாக்கங்களில் பின்வருவன அடங்கும்:
- எதிஹாட் சாலை ஆறு புதிய பாதைகள் (ஒவ்வொரு திசையிலும் மூன்று), சாலையின் திறனை 60% அதிகரிக்கும்.
- எமிரேட்ஸ் சாலை 10 பாதைகளாக விரிவடையும், பயண நேரம் 45% குறையும்.
- ஷேக் முகமது பின் சையத் சாலை 10 பாதைகளாக அகலப்படுத்தப்படும், போக்குவரத்து திறனை 45% அதிகரிக்கும்.
- புதிய 120 கிமீ கூட்டாட்சி நெடுஞ்சாலைக்கான ஆய்வு மேற்கொள்ளப்படும், 12 பாதைகளுடன், தினமும் 360,000 பயணங்களை ஆதரிக்கிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட துபாய் ஓட்டுநர்கள்
தற்பொழுது வெளியான அறிக்கையின்படி, போக்குவரத்து தாமதங்கள் அதிகமாக நடந்த இடங்கள்:
- துபாய்: 45 மணிநேரம் இழப்பு (கடந்த ஆண்டை விட 10 மணிநேரம் அதிகம்)
- அபுதாபி: 29 மணிநேரம்
- உம் அல் குவைன்: 28 மணிநேரம்
- அல் அய்ன்: 17 மணிநேரம்
- ஃபுஜைரா: 8 மணிநேரம்
துபாய் கடந்த 20 ஆண்டுகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பில் 175 பில்லியன் திர்ஹம் செலவிட்டுள்ளது. அதில் பின்வரும் முக்கிய திட்டங்களையும் வழங்கியுள்ளது:
- துபாய் மெட்ரோ மற்றும் டிராம் (100+ கிமீ)
- 25,000 லேன்-கிமீ சாலைகள்
- 560 கிமீ சைக்கிள் ஓட்டுதல் பாதைகள்
- 1,050 பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்
- 177 பாதசாரி பகுதிகள்
வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது
இவ்வாறு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிக வாகனங்களின் காரணமாக ஏற்படும் அதிகரித்த நெரிசல் காரணமாக, துபாயின் நெரிசலான நேரங்களில் சராசரி வேகம் குறைந்துள்ளது என கூறப்படுகின்றது.
காலை/பிற்பகல் பயணங்கள்:
- 2025 இல் 29 mph
- 2024 இல் 32 mph
- 2023 இல் 33 mph
இதேபோல், காலை பயணத்தின் போது நகர மையத்திற்குள் செல்லும் கடைசி மைல் வேகம் 2025 இல் மணிக்கு 21 மைல்களாகவும், 2024 இல் 22 மைல்களாகவும், 2023 இல் 23 மைல்களாகவும் இருந்தது என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய ஒப்பீடு
அமீரகம் போன்று உலகளவில் நெரிசலான இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இஸ்தான்புல் இரண்டாவது ஆண்டாக மிகவும் நெரிசலான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, 2025 இல் 118 மணிநேரம் வரை நெரிசலில் இழப்பதாக கூறப்படுகின்றது. மெக்ஸிகோ நகரம், சிகாகோ, நியூயார்க் நகரம், லண்டன், பாரிஸ் மற்றும் ஜகார்த்தா ஆகியவை மற்ற அதிக நெரிசல் கொண்ட நகரங்களில் அடங்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel