துபாய் எமிரேட் முழுவதும் ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்ஸி சேவைகளைத் தொடங்க அதிகாரிகள் தயாராகி வரும் நிலையில், சிறந்த போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் மற்றொரு முக்கிய படியை எடுத்துள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சி சேவைகளைத் தொடங்குவதற்காக அமீரகம் முழுவதும் 65 இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

RTA பகிர்ந்துள்ள வீடியோ விளக்கக்காட்சியின்படி, இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் இரண்டு செயல்பாட்டு மண்டலங்களில் செயல்படுத்தப்படும். மண்டலம் ஒன்றில் 17 அங்கீகரிக்கப்பட்ட இடங்களும், மண்டலம் இரண்டில் 48 இடங்களும் அடங்கும். இந்த பகுதிகள் அனைத்தும் சேர்ந்து, துபாயில் இதுவரை தானியங்கி டாக்ஸி செயல்பாடுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சாலைப் பகுதிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையைக் குறிக்கின்றன.
அங்கீகரிக்கப்பட்ட இந்த மண்டலங்கள், பைடு நிறுவனத்தின் அப்பல்லோ கோ (Baidu Apollo Go) திட்டத்தால் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை துபாய் சயின்ஸ் பார்க்கில் பைடு அப்பல்லோ கோ-வின் தானியங்கி வாகனங்கள் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சீனாவிற்கு வெளியே இந்நிறுவனத்தின் முதல் தானியங்கி வாகனக் கட்டுப்பாட்டு மையமாகும்.
இந்த புதிய கட்டுப்பாட்டு மையம், துபாயில் உள்ள ரோபோடாக்ஸிகளின் வாகனப் பராமரிப்பு, சார்ஜிங், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு உட்பட தினசரி செயல்பாடுகளை நிர்வகிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இது எமிரேட்டின் பொதுச் சாலைகளில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகளின் நிகழ்நேர இயக்கத்தையும் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் பாதுகாப்பு ஓட்டுநர் இல்லாமல் முழுமையாக தானே இயங்கும் வாகனங்களைச் சோதிக்க, அப்பல்லோ கோ நிறுவனத்திற்கு துபாயின் முதல் அனுமதியை RTA வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வணிக ரீதியான ரோபோடாக்ஸி சேவைகளைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் வரும் ஆண்டுகளில், துபாயில் தனது வாகனக் குழுவை 1,000-க்கும் மேற்பட்ட தானியங்கி வாகனங்களாக விரிவுபடுத்த அப்பல்லோ கோ நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தத் திட்டம், மார்ச் 2025-ல் RTA மற்றும் பைடு இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் ஜுமைரா போன்ற பகுதிகளில் ஏற்கனவே முந்தைய சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, தற்போதைய சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், துபாய்வாசிகள் விரைவில் நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாக ஓட்டுநர் இல்லாத டாக்சிகள் இயங்குவதைக் காணலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel