ஓட்டுநர் இல்லாத வாகனங்களின் பயன்பாடுகள் அமீரகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அமீரக சாலைகளில் பரவலாக தானியங்கி வாகனங்களின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ள நிலையில் அமீரகம் தனது முதல் தானியங்கி வாகன செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது. ‘Baidu Apollo Go’வின் இந்த வசதி ஓட்டுநர் இல்லாத வாகனங்களை நிர்வகித்து கண்காணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது அமீரகம் முழுவதும் குடியிருப்பாளர்கள் பயணிக்கும் விதத்தை மாற்றக்கூடிய வணிக ரீதியான தானியங்கி டாக்சி சேவைகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பைடு அப்பல்லோ கோ-வின் தானியங்கி வாகன செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டதன் மூலம், துபாய் தானியங்கி போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இது சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடு-வின் மையமாகும்.
சீனாவுக்கு வெளியே உள்ள முதல் மையமான இது, துபாய் சயின்ஸ் பார்க்கில் சுமார் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த புதிய மையம் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தலைமை இயக்குநர் மத்தார் அல் தயார் மற்றும் பைடு நிறுவனத்தின் கார்ப்பரேட் துணைத் தலைவர் மற்றும் அதன் நுண்ணறிவு ஓட்டுநர் குழுவின் தலைவர் யுன்பெங் வாங் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையம், ஸ்மார்ட் இயக்கம் மற்றும் AI சார்ந்த போக்குவரத்தில் உலகளவில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற துபாயின் லட்சியத்தை வலுப்படுத்துகிறது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியான அறிக்கைகளின் படி, வணிக ரீதியான ஓட்டுநர் இல்லாத பயணச் சேவை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தானியங்கி வாகனங்களின் தொகுப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 1,000 வாகனங்கள் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தானியங்கி செயல்பாடுகளுக்கான மையம்
இந்த புதிய மையம், கண்காணிப்பு, பாதுகாப்புச் சோதனைகள், மென்பொருள் புதுப்பிப்புகள், சார்ஜிங் மற்றும் பராமரிப்பு உட்பட தானியங்கி வாகனச் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயிற்சி அறைகளை கொண்டுள்ளதுடன், பொதுச் சாலைகளில் இயங்கும் ஓட்டுநர் இல்லாத வாகனங்களின் நிகழ்நேரக் கட்டுப்பாட்டையும் ஆதரிக்கிறது.
ஓட்டுநர் இல்லாமல், நியமிக்கப்பட்ட சாலைகளில் முழுமையாகத் தானியங்கி வாகனங்களை இயக்க அனுமதிக்கும் துபாயின் முதல் அனுமதியை RTA வழங்கியுள்ளது. இது எமிரேட்டின் போக்குவரத்து உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத டாக்ஸிகளுக்கான பாதை
துபாயில் டிரைவர் இல்லா டாக்ஸிகளை அறிமுகப்படுத்துவதற்காக RTA மற்றும் பைடு அப்பல்லோ கோ இடையே மார்ச் 2025-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 50 ஓட்டுநர் இல்லாத வாகனங்களுடன் சோதனைச் செயல்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டு, முழுமையான வணிகச் சேவைகளுக்கு வழிவகுத்தன.
துபாயின் ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு மீதான உலகளாவிய நம்பிக்கையை இந்த மையம் பிரதிபலிக்கிறது என்று அல் தயார் கூறியுள்ளார். தானியங்கி இயக்கம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் மற்றும் நகரத்தின் போக்குவரத்து நெட்வொர்க்கின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வலுவான ஒழுங்குமுறை ஆதரவு காரணமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பைடு நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பரந்த பிராந்தியம் முழுவதும் தானியங்கி பயணச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு அடித்தளம் என்றும் அந்த நிறுவனம் விவரித்துள்ளது.
நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம்
அப்பல்லோ கோ உலகளவில் 22 நகரங்களில் செயல்படுகிறது மற்றும் 17 மில்லியனுக்கும் அதிகமான டிரைவர் இல்லா வாகன பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்தத் தளம் 240 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தானியங்கி ஓட்டுதலைப் பதிவு செய்துள்ளது; இதில் 140 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஓட்டுநர் இல்லாமலேயே பயணிக்கப்பட்டுள்ளது. இது துபாயில் தற்போது அறிமுகப்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் முதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நடவடிக்கை, துபாயை எதிர்காலப் போக்குவரத்துத் தீர்வுகளுக்கான ஒரு உலகளாவிய சோதனைக்களமாக நிலைநிறுத்துகிறது. இதன் மூலம் துபாய் நகரம் அறிவார்ந்த, நிலையான மற்றும் ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து முறையை நோக்கிய தனது மாற்றத்தை வேகப்படுத்துகிறது என்பது புலப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel