துபாய் தனது பரந்த நகரத் திட்டமிடல் மற்றும் நிலைத்தன்மை முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக, பார்க்கிங் விதிமுறைகளைத் தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது. சாலைப் போக்குவரத்தை சீராக்கவும், ஒழுங்கற்ற பார்க்கிங்கைக் குறைக்கவும், சாலை உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், நகரத்தின் அழகியல் தோற்றத்தை பராமரிக்கவும், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அமீரகம் முழுவதும் பல பார்க்கிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஒரு புதிய நடவடிக்கையாக, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நடமாடும் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும், குடியிருப்பு மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளை ஒழுங்கற்ற பார்க்கிங்கிலிருந்து விடுவிக்கவும், கேரவன்கள், படகுகள், டிரெய்லர்கள் மற்றும் உணவு டிரக்குகளுக்காக பிரத்யேகமான பார்க்கிங் இடமான அல் ருவைய்யா யார்டு (Al Ruwayyah Yard) திட்டத்தை RTA தொடங்கியுள்ளது.
இந்த புதிய வசதியானது, பார்க்கிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும், சாலை உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், குடியிருப்பு மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் ஒழுங்கற்ற பார்க்கிங்கைக் குறைப்பதன் மூலம் நகரத்தின் காட்சி அழகை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து RTA-வின் பெருநிறுவன நிர்வாக ஆதரவு சேவைகள் துறையின் தலைமைச் செயல் அதிகாரி அப்துல்லா யூசுப் அல் அலி கூறுகையில், இந்தத் திட்டம் மேம்பட்ட உள்கட்டமைப்புடன் கூடிய 335 நவீன பார்க்கிங் இடங்களை வழங்குகிறது. இந்த முயற்சி, ஒழுங்கற்ற பார்க்கிங் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகங்களுக்கான ஒரு முன்னணி உலகளாவிய இடமாக துபாயின் நிலையை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஒழுங்கற்ற பார்க்கிங்கைக் கையாளுதல்
அல் ருவைய்யா யார்டு, RTA-வின் சொத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் பரபரப்பான பகுதிகளில் ஒழுங்கற்ற பார்க்கிங்கால் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதற்கும் ஆன பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும். இத்தகைய பார்க்கிங் பெரும்பாலும் போக்குவரத்து இயக்கத்தைத் சீர்குலைத்து, சாலைப் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அழகியலைப் பாதிக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில், துபாய் முழுவதும் கூடுதல் இடங்களில் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் RTA உறுதிப்படுத்தியுள்ளது.
துபாய் அரசாங்கத்தின் பொது-தனியார் ஒத்துழைப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தத் திட்டம் ஒரு தனியார் துறை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது என்றும் அல் அலி கூறியுள்ளார்.
இந்தத் திட்டம், திறமையான உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் நகரத் தீர்வுகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், துபாயின் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் (D33)-இன் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது என்றும் அந்த அதிகாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel