துபாயில் தொலைந்து போன விலைமதிப்பற்ற பொருட்கள் திருப்பி பத்திரமாக ஒப்படைக்கப்படும் நிகழ்வுகள் அரிதானவை அல்ல, மேலும் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் நகரத்தை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் விவரிக்கும் காரணத்தை அவை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றனர். டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகள் மறந்து விட்டுச்சென்ற பணப் பைகளைத் திருப்பி அனுப்புவது முதல் விமான நிலைய ஊழியர்கள் தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடிப்பது வரை, அன்றாட நேர்மையான செயல்கள் துபாயின் சமூகக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
இதன் வரிசையில் கடந்த வாரம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) இதுபோன்ற ஒரு தருணம் நடந்துள்ளது. அங்கு சென்னைக்கு செல்லவிருந்த தமிழர் தனது தங்க மோதிரத்தை தொலைத்து தவித்த நிலையில், விமான நிலைய ஊழியரின் விரைவான மற்றும் நேர்மையான செயல் பாராட்டப்பட்டு வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகமது முஸ்தக் என்பவர், தனது வருடாந்திர விடுமுறைக்காக சென்னைக்குப் புறப்படத் தயாராகி இருந்தார். அவரது மனைவிக்கு ஒரு மோதிரம் வாங்கி வைத்திருந்த அவர், ஜனவரி 19 வெள்ளிக்கிழமை துபாய் டியூட்டி ஃப்ரீயில் ஷாப்பிங் செய்யும்போது அது தவறிப் போகாமல் இருக்க, தனது விரலில் மோதிரத்தை அணிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு தனது ஜாக்கெட்டை கழற்றும்போது, மோதிரம் அவருக்குத் தெரியாமல் விரலில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு மோதிரம் காணமால் போனதை உணர்ந்த முஸ்தக், கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அந்தப் பகுதியில் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், விமானத்தில் ஏறும் நேரம் நெருங்கியதும், அருகிலுள்ள பாதுகாப்பு அதிகாரிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அவர் விமான நிலையத்தின் தொலைந்து போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அலுவலகத்தில் புகார் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே, மோதிரம் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி புகார் அளித்ததாக முஸ்தக் கூறியுள்ளார்.
அதேசமயம், முஸ்தக், மீண்டும் ஒருமுறை டியூட்டி ஃப்ரீ பகுதிக்கு மீண்டும் திரும்பியுள்ளார், அங்கு அவருக்கு எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், அதே பாதுகாப்பு அதிகாரி காணாமல்போன மோதிரத்தை கையில் வைத்திருந்தார்.
விமான நிலைய ஊழியர் ஜாவித் தனது பணியினை மேற்கொண்டிருக்கும் போது மோதிரத்தைக் கண்டுபிடித்து, பின்னர் அதைச் சமர்ப்பிக்கக் காத்திருப்பதற்குப் பதிலாக, அவர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து, சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, மோதிரத்தின் உரிமையாளரை உறுதி செய்ததாக கூறப்படுகின்றது. அதன்பின், மோதிரம் காணாமல் போன 25 நிமிடங்களுக்குள் முஸ்தாக்கிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த முஸ்தக், DXB வாடிக்கையாளர் சேவைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஊழியரின் செயல்கள் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel