ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள அதிகாரிகள் கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 937 நுகர்வோர் புகார்களைக் கையாண்டு, அவற்றில் 95 சதவீதத்தை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தப் புகார்களில், 28 புகார்கள் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளைக் கொண்ட போலிப் பொருட்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுவது தொடர்பானவை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் புகார்கள் கிடைத்தவுடன் ஆய்வுக் குழுக்கள் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான ஆய்வுகளின் ஒரு பகுதியாக, அமீரகம் முழுவதும் உள்ள 71 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து 666,255 போலிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பு 31,048,729 திர்ஹம் என்று கூறப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் புகார்கள் ராஸ் அல் கைமா பொருளாதார மேம்பாட்டுத் துறையின் (RAK DED) வர்த்தகப் பாதுகாப்புப் பிரிவால் கையாளப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. நுகர்வோரைப் பாதுகாத்தல், நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்தல் மற்றும் வர்த்தக முத்திரை மற்றும் வணிகச் சட்டங்களை அமல்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த ஆய்வு நடவடிக்கைகள் என்று அத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், போலிப் பொருட்கள் நுகர்வோருக்குப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், முறையான வணிகங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் RAK DED எச்சரித்துள்ளது. மேலும், ராஸ் அல் கைமாவில் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையைப் பராமரிப்பதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி, சந்தேகத்திற்கிடமான மீறல்கள் அல்லது போலிப் பொருட்கள் குறித்துப் புகாரளிக்குமாறு அத்துறை குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel