தற்போதைய காலகட்டத்தில் பலவிதமான இடையூறுகள் நிறைந்த விமான பயணச் சூழலில், சரியான நேரத்தில் விமானம் இயங்குவது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் நேரம் தவறாமல் புறப்படும் விமானங்கள் பயணிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், வணிகங்களுக்கு நேரத்தையும் சேமிக்கின்றன.
மேலும், உலகெங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் எந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்கிறார்கள் என்பதும், எந்த விமான நிலையங்களை தேர்வு செய்கிறார்கள் என்பதும் நேரம் தவறாமல் இயக்கப்படும் விமான நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பொருத்தே அமைகிறது.
அவ்வாறு, விமானப் போக்குவரத்துத் தரவு நிறுவனங்களான சிரியம் (Cirium) மற்றும் OAG ஆகியவற்றின் புதிய தரவுகள், மில்லியன் கணக்கான விமானப் பயணப் பதிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் நம்பகமான விமான நிறுவனங்களையும் பரபரப்பான விமான நிலையங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.
சிறந்த நேரந்தவறாத விமான நிறுவனங்கள்
சிரியமின் 2025 நேரந்தவறா செயல்திறன் மதிப்பாய்வின்படி (On-Time Performance Review), ஏரோமெக்சிகோ உலகின் மிகவும் நேரந்தவறாத விமான நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் வந்தடைந்த விமானங்களின் அதிகபட்ச பங்கைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சிறந்த செயல்திறன் கொண்ட சவுதியா ஏர்லைன்ஸ், ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் (SAS), பிரேசிலின் அஸுல் ஏர்லைன்ஸ் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் சீரான செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து 14 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகளுக்குள் வந்தடைவதை நேரந்தவறாத விமானம் என சிரியம் வரையறுக்கிறது. இது விமானத் துறை முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அளவுகோலாகும்.
இதற்கிடையில், OAG-யின் மாதாந்திர நேரந்தவறா செயல்திறன் தரவுகள், டிசம்பர் 2025-ல் முக்கிய விமான நிறுவனங்கள் பிரிவில் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. அதன் 90% விமானங்கள் சரியான நேரத்தில் வந்தடைந்ததாகத் தரவுகள் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து ஹைனான் ஏர்லைன்ஸ் மற்றும் சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை உள்ளன. OAG-யின் தரவரிசைகள் விமான ரத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன, இது செயல்பாட்டு நம்பகத்தன்மையின் கடுமையான அளவீட்டை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் நேரந்தவறாத முக்கிய விமான நிலையங்கள்
விமான நிலையங்களைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் மையமாக இஸ்தான்புல் விமான நிலையத்தை சிரியம் தரவரிசைப்படுத்தியுள்ளது.
முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றவை:
- இஸ்தான்புல் விமான நிலையம் (துருக்கி)
- சாண்டியாகோ சர்வதேச விமான நிலையம் (சிலி)
- டோகுமென் சர்வதேச விமான நிலையம் (பனாமா சிட்டி)
- குவாயாகில் சர்வதேச விமான நிலையம் (ஈக்வடார்)
- பிரேசிலியா சர்வதேச விமான நிலையம் (பிரேசில்)
இந்த விமான நிலையங்கள் திறமையான விமானப் பராமரிப்பு, போக்குவரத்து நெரிசல் மேலாண்மை மற்றும் வானிலை இடையூறுகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றில் தனித்து நின்றதாகக் கூறப்பட்டுள்ளது.
துபாய் உலகின் பரபரப்பான விமான நிலையமாகத் தொடர்கிறது
OAG-யின் உலகின் பரபரப்பான விமான நிலையங்கள் தரவுகளின்படி, DXB விமான நிலையம் விமான இருக்கை கொள்ளளவின் அடிப்படையில் உலகின் பரபரப்பான விமான நிலையமாகத் தொடர்கிறது. இது ஜனவரி 2026-ல் தோராயமாக 5.5 மில்லியன் இருக்கைகளுடன் பயணிகளை கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 4% அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel