ADVERTISEMENT

விரைவில் ‘Dubai Loop‘ பணிகளைத் தொடங்கவுள்ள துபாய்..!! சேவை வழங்கப்படவுள்ள இடங்கள் வெளியீடு..

Published: 3 Feb 2026, 7:06 PM |
Updated: 3 Feb 2026, 7:06 PM |
Posted By: Menaka

துபாயில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஒரு அதிகரித்து வரும் சவாலாகத் தொடர்வதால், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நகரத்தின் முக்கிய மையங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எதிர்கால சுரங்க போக்குவரத்து அமைப்பான ‘துபாய் லூப்’-இன் முதல் கட்ட கட்டுமானப் பணிகளைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பரந்த போக்குவரத்து நெரிசல் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, பிரபல தொழிலதிபர் மற்றும் பணக்காரரான எலான் மஸ்க்கின் போரிங் கம்பெனியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை அடிப்படையிலான இந்தத் திட்டம், சுமார் 600 மில்லியன் திர்ஹாம் ஆரம்ப முதலீட்டில் தொடங்கவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களளால் ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, நிலத்தடி சுரங்கங்கள் வழியாக முக்கிய வணிக, குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளை இணைப்பதன் மூலம் நகரத்தின் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

செவ்வாயன்று துபாயில் நடைபெற்ற ‘World Governments Summit’-இல் பேசிய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தலைமை இயக்குநர் மற்றும் தலைவர் மத்தார் அல் டாயர், போரிங் கம்பெனியுடனான ஒப்பந்தம் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு கையெழுத்தானதாகவும், கட்டுமானப் பணிகள் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

“துபாய் லூப் என்பது ஸ்மார்ட் மற்றும் நிலையான போக்குவரத்து குறித்த துபாயின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமான திட்டமாகும்” என்று கூறிய அவர், சுரங்கப்பாதை அடிப்படையிலான இந்த போக்குவரத்து அமைப்பை ஏற்கும் கலிபோர்னியாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது நகரமாக துபாய் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

24 கி.மீ நெட்வொர்க்

RTA உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி, துபாய் லூப் இறுதியில் 24 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவடையும், இதில் முதல் கட்டம் சுமார் 6 கி.மீ. தூரத்தை உள்ளடக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஆரம்ப கட்டத்திற்கு 600 மில்லியன் திர்ஹம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், முழு திட்டத்திற்கும் 2.5 பில்லியன் திர்ஹம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பில், தரை மட்ட மற்றும் நிலத்தடி நிலையங்களால் ஆதரிக்கப்படும் நிலத்தடி சுரங்கங்களின் வலையமைப்பு இடம்பெறும், இது பயணிகள் தடையின்றி தொடக்கம் முதல் இறுதி வரை பயணிக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகின்றது.

துபாய் லூப் இணைக்கும் முக்கிய இடங்கள்

துபாய் லூப் சேவையின் முதல் கட்டம் DIFC, துபாய் மால் மற்றும் புர்ஜ் கலிஃபா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது துபாயின் பரபரப்பான சில பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

பாரம்பரிய மெட்ரோ கட்டுமானத்தை விட போரிங் கம்பெனியின் சுரங்கப்பாதை தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க வகையில் மலிவானது மற்றும் வேகமானது என்று அல் தாயர் எடுத்துரைத்துள்ளார். வழக்கமான முறைகளைப் போலல்லாமல், இந்த அமைப்பு நேர்கோட்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பு படிப்படியாக கீழ்நோக்கிச் செல்ல அனுமதிக்கிறது, இது செயல்திறனை மேம்படுத்துகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.

திறன் மற்றும் இணைப்பு

அதன் ஆரம்ப கட்ட அமைப்பில், துபாய் லூப் ஒரு நாளைக்கு சுமார் 13,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு சவால்களைத் தீர்க்கவும் உதவும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகளாவிய தளங்களில் அறிவிக்கப்பட்ட லட்சியத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் துபாயின் நற்பெயரை இந்தப் திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது என்று அல் தாயர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, “உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டன அல்லது செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

RTA வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, முதல் கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் செயல்பாடுகள் தொடங்கியவுடன் எதிர்கால கட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel