கடந்த வாரம் அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரை காண அவரது மனைவியும் 22 மாத குழந்தையும் விசிட்டில் வந்திருந்த சமயத்தில், ஷார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை கடுமையான துயரத்தில் ஆழ்த்தியது.
கேரளாவைச் சேர்ந்த ஷெராஃபுதீன் மற்றும் சஃப்னா தம்பதியினரின் ஒரே மகன் ஆலன் ரூமி, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியன்று ஷார்ஜாவின் முவைலா பகுதியில் நடந்த ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்தியாவிற்கு திரும்பிய அவரது குடும்பத்தினர் தனது மகன் குறித்தும் சம்பவம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளனர்.
திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆலன் ரூமி பிறந்ததாகவும், 2015 ஆம் ஆண்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிரிய குழந்தை ஆலன் குர்தி மற்றும் ஆன்மீக கவிஞர் ரூமியின் நினைவாக தனது குழந்தைக்கு இந்தப் பெயர் சூட்டியதாகவும், அவரது தந்தை ஷெராஃபுதீன் தெரிவித்துள்ளார்.
பிறந்து 22 மாதங்களில் உயிரிழந்த அந்த குழந்தை துபாயில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய ஷெராஃபுதீன், “அவர் எங்கள் வாழ்க்கையின் ஒளி. ஆனால் நாங்கள் அவரை சிறிது காலத்திற்கு மட்டுமே வைத்திருக்க விதிக்கப்பட்டோம்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
விபத்து எப்படி நடந்தது?
ஷெராஃபுதீன் வேலையில் இருந்தபோது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி, தங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள மணல் நிறைந்த பார்க்கிங் இடத்தில் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக ஆலனை கீழே அழைத்துச் சென்றுள்ளார். மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் அதே வயதுடைய ஒரு குழந்தையுடன் இருந்தார், இரண்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த குழந்தைகள் ஒரு பூனையைக் கண்டு அதை நோக்கி ஓடியதாகவும், பெற்றோர் அழைத்ததும் ஒரு குழந்தை நின்றது, ஆனால் ஆலன் தொடர்ந்து ஓடியதாகவும் கூறப்படுகிறது. தனது தாய் தன்னைத் துரத்துவதைக் கண்டதும், விளையாடுவதாக நினைத்து ஆலன் எதிரே வரும் காரின் பாதையில் வேகமாக ஓடியுள்ளார்.
அந்த சமயத்தில் இந்தியர் ஒருவர், தனது மனைவியை அழைத்துச் செல்ல பார்க்கிங் பகுதியை விட்டு காரை வெளியேற்றியிருக்கிறார். அப்போது கார் குழந்தை மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மீது எந்த புகாரும் இல்லை என்று குடும்பத்தினர் ஷார்ஜா காவல்துறையிடம் எழுத்துப்பூர்வ அறிக்கையை அளித்து அவரை விடுவித்துள்ளனர். அவரது பாஸ்போர்ட் நீதிமன்ற நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில் தக்கவைக்கப்பட்டது.
அதன் பின், அந்த ஓட்டுநர் தனக்கு மெஸ்சேஜ் செய்ததாகவும், “இது யாருடைய தவறும் இல்லாத ஒரு பயங்கரமான விபத்து” என்றும் குழந்தையின் தந்தை ஷெராஃபுதீன் கூறியுள்ளார். மேலும் “ஓட்டுநரை தண்டிப்பதால் எங்கள் மகன் திரும்பி வரமாட்டான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்த மறுநாளே ஆலன் துபாயில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் சென்றனர். திருமணமான ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தம்பதியினரின் ஒரே குழந்தை ஆலன் என்பது குறிப்பிடத்தக்கது.
நொறுங்கிய கனவுகள்
ஷெராஃபுதீன் ஈத் அல் ஃபித்ருக்குப் பிறகு தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருந்தார். அவரது நிறுவனம் ஒரு குடும்ப விசாவை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டதால் மலிவு விலையில் தங்க ராஸ் அல் கைமா அல்லது ஃபுஜைராவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ரமலானின் கடைசி பத்து நாட்களில் உம்ரா செய்து ஈத் பண்டிகைக்கு இந்தியா செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
“எங்களுக்கு இந்த திட்டங்கள் அனைத்தும் இருந்தன, ஆனால் கடவுள் எங்களுக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார். நாங்கள் அவரை நம்பி முன்னேற முயற்சிக்கிறோம்.” என்று ஷெராஃபுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் குடும்பத்தினருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், “என் மனைவியை தனியாக விட்டுவிட நான் விரும்பவில்லை. நாங்கள் மெதுவாக இந்த சூழ்நிலையை சமாளிக்கக் கற்றுக்கொள்கிறோம்,” என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel