ADVERTISEMENT

ரமலான் 2026: அமீரகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்குமா..?? அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை..!!

Published: 12 Feb 2026, 1:33 PM |
Updated: 12 Feb 2026, 1:34 PM |
Posted By: Menaka

ரமலான் மாதம் நெருங்கி வருவதால், உணவு பொருட்களின் தேவை பொதுவாக அதிகமாக இருக்கும் இந்த மாதத்தில் ஒரு சில கடைகள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று சில குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் நியாயமற்ற முறையில் அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்க ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

ரமலான் மாதத்திற்கான அதன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து நியாயமற்ற அதிகரிப்புகளைத் தடுக்க அமைச்சகம் தனது பிரச்சாரத்தைத் தொடரும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சமையல் எண்ணெய், முட்டை, பால் பொருட்கள், அரிசி, சர்க்கரை, கோழி, பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் கோதுமை ஆகியவை கண்காணிப்பின் கீழ் உள்ள ஒன்பது அத்தியாவசிய பொருட்களில் அடங்கும்.

புதன்கிழமை ஒரு ஊடக சந்திப்பில் பேசிய பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரி, விற்பனையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக ஆய்வுக் குழுக்கள் ரமலான் முழுவதும் தினசரி சோதனைகளை நடத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, விற்பனையாளர்கள் அடிப்படைப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதற்கு முன்பு குறைந்தது ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விலை நிர்ணயக் கொள்கையை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கை அடிக்கடி செய்யப்படும் விலை மாற்றங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.

அதுமட்டுமில்லாமல், இந்த ஒன்பது பொருட்களின் விலைகளைக் கண்காணிக்கவும், முன் ஒப்புதல் இல்லாமல் எந்த அதிகரிப்பும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அமைச்சகம் ஒரு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில், இந்த தளத்தின் மூலம் 377 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் சுமார் 30 சதவீதம் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டதாக அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்தாண்டு ரமலான் மாதத்தின் போது உணவுப் பொருட்களின் விலைகளை அமைச்சகம் தொடர்ந்து பகுப்பாய்வு செய்து, ஏதேனும் நியாயமற்ற அதிகரிப்புகள் கண்டறியப்பட்டால், சரியான நடவடிக்கை எடுக்கும் என்று அல் மர்ரி கூறியுள்ளார்.

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான விலை உயர்வுகள் குறித்து 800 1222 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது அமைச்சகத்தின் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ குடியிருப்பாளர்கள் புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். புனித மாதத்தில் தங்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வாங்குபவர்கள் கொள்முதல் ரசீதுகளை வைத்திருக்கவும், விலைகளை ஒப்பிடவும், ஆய்வாளர்களுடன் ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel