ADVERTISEMENT

‘அமீரகத்தில் சொத்துச் சந்தை சரிவு’, ‘குடியிருப்பாளர்கள் பெருமளவில் வெளியேற்றம்’ என பரவி வரும் செய்தி: திட்டவட்டமாக மறுத்துள்ள துபாய் அதிகாரிகள்!!

Published: 26 Mar 2026, 9:41 AM |
Updated: 26 Mar 2026, 9:41 AM |
Posted By: Menaka

ஈரானுடன் தொடர்புடைய மோதலால் பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் ‘துபாயிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேற்றம்’, ‘துபாய் இனி பாதுகாப்பானது அல்ல’, ‘விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன’, ‘சூப்பர் மார்கெட்களில் அலமாரிகள் காலியாக உள்ளன’ என்பது போன்ற அச்சமூட்டும் வதந்திகளை துபாய் அதிகாரிகள் முற்றிலும் பொய்யானவை எனக் கூறி வன்மையாக மறுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக துபாய் அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட ஒரு வீடியோவில், இந்தத் தவறான சித்தரிப்புகளுக்குப் பதிலளித்தது. உண்மைக்கு எந்த அடிப்படையும் இல்லாதபோதிலும், வைரலாகும் தலைப்புச் செய்திகள் எவ்வாறு பரவலாகப் பகிரப்படுகின்றன என்பதை அது எடுத்துக்காட்டியது.

மேலும் “வதந்திகளைத் தவிர்த்து, உண்மைகளில் கவனம் செலுத்துங்கள், துபாய் வழக்கம் போல் இயங்குகிறது. போலிச் செய்திகளால் ஏமாறாதீர்கள். தகவல்களைத் தெரிந்து கொண்டு, பகிரும் முன் சரிபார்க்கவும்.” என்று அந்த வீடியோவுடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்தக் காணொளி, பரவலாகப் பரவி வரும் பின்வரும் பல கூற்றுகளை மறுத்தது.

  • வங்கிகள் முதலீட்டாளர் நிதிகளை முடக்குகின்றன
  • சொத்துச் சந்தையில் சரிவு
  • செல்வந்த குடியிருப்பாளர்கள் அமீரகத்தை விட்டு வெளியேறுகின்றனர்

இவை அனைத்தும் பொய்யானவை எனத் தெளிவாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டன.

ADVERTISEMENT

குறிப்பாக, பிராந்திய அளவில் கவனம் அதிகரித்துள்ள காலங்களில், அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து வரும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்புமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்றும், அது சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் உறுதியளிக்கும் வகையில், துபாயில் அன்றாட வாழ்க்கை எந்த இடையூறும் இன்றித் தொடர்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைவரும் ஆன்லைனில் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel