ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், இந்த மாதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பிரபலமான துபாய் மிராக்கிள் கார்டனை (Dubai Miracle Garden) இலவசமாகப் பார்வையிட முடியும். இது குடும்பங்களுக்கு ஓய்வெடுக்கவும், துபாயின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றை ரசிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை, அமீரகக் குடியிருப்பாளர்கள் நுழைவாயிலில் தங்கள் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் அடையாள அட்டையை (Emirates ID) காண்பிப்பதன் மூலம், துபாய் மிராக்கிள் கார்டனுக்குள் இலவசமாக நுழையலாம்.
இந்தச் சலுகை ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது, மேலும், இதற்கு முன் பதிவு எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்றும், அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு ஏதுமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சலுகைக் காலத்தில், பூங்கா தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சமூகத்தை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி வரும் வேளையில், குடியிருப்பாளர்களுக்கு ஓய்வெடுக்கவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடவும் வாய்ப்புகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அர்ஜான், அல் பர்ஷா சவுத் 3 பகுதியில் அமைந்துள்ள துபாய் மிராக்கிள் கார்டன், உலகின் மிகப்பெரிய இயற்கை மலர்ப் பூங்காக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது லட்சக்கணக்கான பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நேர்த்தியான மலர் அலங்காரங்கள், கருப்பொருள் சார்ந்த கலைநிறுவல்கள் மற்றும் பிரம்மாண்டமான மலர் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கான மேலும் சில இலவச சுற்றுலாத் தலங்கள்
இதுமட்டுமின்றி, துபாயில் உள்ள அட்லாண்டிஸ், தி பாம் நிறுவனமும், மார்ச் 10 முதல் மார்ச் 22 வரை ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு, தனது இரண்டு முக்கிய சுற்றுலாத் தலங்களான ‘Aquaventure World’ மற்றும் ‘The Lost Chambers Aquarium’ ஆகியவற்றிற்கு இலவச அனுமதியை வழங்குகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் வெளிப்புறங்களில் செலவிடும் அதே வேளையில், நகரம் முழுவதும் உள்ள பொழுதுபோக்குத் தலங்களைச் சுற்றிப்பார்க்க அவர்களை ஊக்குவிப்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel