ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் காராணமாக ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவிலிருந்து தனது முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சரக்குகளை ஏற்றி வரும் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இந்தியா கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
வளைகுடா பிராந்தியங்களிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிச் செல்லும் இந்தியக் கொடி கொண்ட கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியக் கடற்படை தளவாடக் கப்பல்கள் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை ஓமான் வளைகுடாவிற்கு அனுப்பியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
போர்ச் சூழல் நிலவும் காலங்களில், மத்திய கிழக்கின் பதற்றமான கடற்பரப்பில் இயங்கும் இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக 2019-ல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சங்கல்ப் (Operation Sankalp) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய எரிசக்தி விநியோகங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்
இந்திய ஊடக அறிக்கைகளின் படி, போர்க்கப்பல்கள் நேரடியாக ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முடியாது என்றாலும், இந்தியத் துறைமுகங்களுக்கு வரும் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் எரிவாயு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அவை பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் கிட்டத்தட்ட 90% வளைகுடாப் பகுதியிலிருந்து வருவதால், இந்த வழித்தடங்கள் மிகவும் முக்கியமானவை.
அதிகாரிகள் கூறுகையில், இந்தியக் கொடியை ஏந்திய 22 கப்பல்கள் தற்போது இந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லக் காத்திருக்கின்றன; அவை பின்வரும் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன:
- 1.67 மில்லியன் டன் கச்சா எண்ணெய்
- 320,000 டன் எல்பிஜி
- 200,000 டன் எல்என்ஜி
பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், சில கப்பல்கள் வெற்றிகரமாக இந்தியாவை வந்தடைந்துள்ளன. ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் குஜராத்திற்கு 90,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜியை வழங்கின, அதே நேரத்தில் ஜக் லாட்கி என்ற டேங்கர் கப்பல் முந்த்ரா துறைமுகத்திற்கு 80,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியக் கடற்படையானது, வளைகுடா, சீஷல்ஸ், மாலத்தீவுகள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட முக்கிய கடல் மண்டலங்களைத் தொடர்ந்து கண்காணித்து, கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்து, பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel