ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் நிலையற்ற வானிலை தொடர்ந்ததாகவும், நாட்டின் பல பகுதிகளில் மின்னல் வெட்டியது, இடி இடித்து மழை பெய்ததாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக நகரம் முழுவதும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாக நகரும் போக்குவரத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த மோசமான சூழ்நிலைகளின் போது எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.
அமீரகம் முழுவதும் இடையூறுகள்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையானது, போக்குவரத்து உட்பட மக்களின் அன்றாட வாழ்க்கையை கணிசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, துபாயில், மோசமான வானிலை காரணமாக ஷார்ஜா மற்றும் அஜ்மானுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 27 அன்று அரசு ஊழியர்கள் தொலைதூரப் பணியை மேற்கொள்ளுமாறு ராஸ் அல் கைமா அறிவித்துள்ளது.
அத்துடன், நகரில் உணவு விநியோக சேவைகளும் இரவு முழுவதும் பாதிக்கப்பட்டன. ஆன்லைன் உணவு டெலிவரி தளங்கள் தற்காலிகமாக ஆர்டர்களை நிறுத்தின, அதே நேரத்தில் பயண முன்பதிவு செயலிகள் தாமதங்களையும் குறைந்த அளவிலான சேவையையும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.
வானிலை நிகழ்வுகள்
இந்நிலையில், நேற்றிரவு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் மின்னல் தாக்கிய ஒரு வியத்தகு தருணம் படம்பிடிக்கப்பட்டது. எமிரேட்டின் வானுயர் கட்டிடங்களை மின்னல் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ஊதா அல்லது கருநீல மின்னல் வளிமண்டலத்தில் உள்ள ஆற்றல்மிக்க நைட்ரஜனுடன் தொடர்புடையவை என்றும், தூசி மற்றும் மணல் ஒளியைச் சிதறடிப்பதால் ஏற்படும் ஆரஞ்சு நிற ஒளிக்கீற்றுகள் தோன்றுவதாகவும், புயலின் போது காணப்பட்ட அசாதாரண மின்னல் நிறங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்
அமீரகத்தில் நிலவும் மோசமான வானிலையை கருத்தில் கொண்டு, அபுதாபி காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள், பல சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சில பகுதிகளில் வேக வரம்பு மணிக்கு 60 கி.மீ. ஆகவும், முக்கிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கி.மீ. ஆகவும் குறைக்கப்பட்டது.
இதனிடையே, தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுபோன்ற வானிலையின் போது இடி மற்றும் உரத்த சத்தங்கள் இயல்பானவை என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்ததுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை வரை வானிலை தொடரும்
ஏற்கனவே, அறிவித்த படி, வெள்ளிக்கிழமை இரவு வரை மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் (NCM) உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையற்ற வானிலை தணியத் தொடங்குவதால், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு நிலைமைகள் படிப்படியாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றொரு கடுமையான வானிலையை எதிர்கொள்வதால், குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கடற்கரைகளைத் தவிர்க்குமாறும், தேவையற்ற பயணங்களைக் குறைக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel