இரண்டு வாரங்களுக்கும் மேலாக அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் நீடிக்கும் நிலையில், ஈரான் இராணுவமானது இன்றும் (திங்கட்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இன்று (மார்ச் 16) மட்டும் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 21 ட்ரோன்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் மூலம் ஈரானிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் 304 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளன. அதே காலகட்டத்தில் 1,627 ட்ரோன்கள், 15 குரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான், எமிராட்டி, பாலஸ்தீனம், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த நாட்டவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்கள் உட்பட மொத்தம் 145 பேர் காயங்களுக்கு ஆளாகியதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய போர்ச்சூழலுக்கு மத்தியில், அமீரகத்தின் ஆயுதப்படைகள் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாக தயாராக உள்ளன என்பதை நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel