ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலையில் சமீபத்திய அதிகரிப்புகள் தற்காலிகமானவை மற்றும் வரையறுக்கப்பட்டவை என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர், மேலும் பிராந்திய பதட்டங்கள் தொடர்ந்து நிலவினாலும் நாடு முழுவதும் உணவு விநியோகம் நிலையானதாகவே உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் காணப்பட்ட விலை மாற்றங்கள் தற்போதைய பிராந்திய நெருக்கடியின் எதிரொலி என்று ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது, மேலும் விலைகளை நிலைப்படுத்த பாதிக்கப்பட்ட பொருட்களின் கூடுதல் அளவு ஏற்கனவே சந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நாடு முழுவதும் போதுமான அளவில் கிடைக்கின்றன என்றும், உள்ளூர் சந்தைகளில் மக்களுக்கு பல மாற்று வழிகள் தொடர்ந்து கிடைக்கின்றன என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, இப்போதைக்கு அமீரகத்தில் பொருட்களின் கிடைக்கும் தன்மை குறித்து கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும், விநியோகம் தொடர்ந்து அதிகரிக்கும் போது விலைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள்
இத்தகைய நெருக்கடியான நிலையில், நியாயமற்ற விலை அதிகரிப்புகளைத் தடுக்க, ரமலான் தொடக்கத்தில் இருந்து சந்தைகளில் விலை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ், ஒன்பது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதாவது சமையல் எண்ணெய், முட்டை, பால் பொருட்கள், அரிசி, சர்க்கரை, கோழி, பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் கோதுமை இந்தப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான அமைச்சகம் மற்றும் தேசியக் குழுவின் முன் ஒப்புதல் இல்லாமல் அதிகரிக்க முடியாது.
உணவு இருப்புகள்
ஐக்கிய அரபு அமீரகம் ஆறு மாதங்கள் வரை சந்தை தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்ட அத்தியாவசியப் பொருட்களின் மூலோபாய கையிருப்பை பராமரிப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
நாடு முழுவதும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், நெருக்கடிகள் அல்லது அவசரநிலைகளின் போது விரைவான பதில்களை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட அமைப்பின் மூலம் இந்த இருப்புக்கள் வெவ்வேறு பிராந்தியங்களில் விநியோகிக்கப்படுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், நாட்டின் துறைமுகங்கள் வழியாக கப்பல் மற்றும் விநியோக இயக்கங்கள் வழக்கமாகத் தொடர்வதால், பொருட்கள் இடையூறு இல்லாமல் சந்தைகளை அடைய முடிவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் சர்வதேச விநியோக கூட்டாளர்களின் பரந்த வலையமைப்பையும் ஐக்கிய அரபு அமீரகம் பராமரிக்கிறது, தேவைப்பட்டால் அதிகாரிகள் மாற்றுப் பொருட்களை விரைவாகப் பெற உதவுகிறது.
ஆய்வுகள் மற்றும் அமலாக்கம்
பிராந்திய நெருக்கடி தொடங்கியதிலிருந்து, உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுத் துறைகளுடன் இணைந்து 7,100க்கும் மேற்பட்ட ஆய்வு சுற்றுப்பயணங்களை நடத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுகளின் போது, 567 மீறல்கள் கண்டறியப்பட்டன, முக்கியமாக நியாயமற்ற விலை உயர்வு தொடர்பான மீறல்கள் அதிகம் பதிவானதாகக் கூறப்படுகிறது. அத்துடன் வர்த்தகர்கள், சப்ளையர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு 449 எச்சரிக்கைகளை விடுத்து, மொத்தம் 207,250 அபராதம் விதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டில் நுகர்வோர்களாகிய குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவும் சந்தை நிலைத்தன்மையை உறுதி செய்யவும் கண்காணிப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் விலை மீறல்களைப் புகாரளிக்க குடியிருப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிகின்றனர்.
குறிப்பாக. நெருக்கடியான சூழலில், முன்கூட்டியே உணவைப் பதுக்குதல் அல்லது அதிகப்படியான வாங்குதலைத் தவிர்ப்பது விலை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிறப்பு ஆய்வுக் குழுக்கள் நாடு முழுவதும் சந்தைகளில் தினசரி கள சோதனைகளை நடத்தி வருகின்றன, நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தடுப்பதற்கும் பொருளாதார மேம்பாட்டுத் துறைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel