தற்போதைய பிராந்திய சவால்களுக்கு மத்தியிலும், வலுவான உலகளாவிய வர்த்தக இணைப்புகள் மற்றும் மேம்பட்ட லாஜிஸ்டிக்ஸின் ஆதரவுடன் அமீரகத்தின் உணவு விநியோகம் நிலையானதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது என்று பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஷார்ஜாவில் உள்ள லூலு ஹைப்பர் மார்க்கெட்டிற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளூர் கையிருப்புகளை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்றும், அது சர்வதேச விநியோகஸ்தர்களின் பரந்த வலையமைப்பிலிருந்து பயனடைகிறது, இது தடைகள் ஏற்படும் பட்சத்தில் பல மூலங்களிலிருந்து உணவுக்கான தொடர்ச்சியான அணுகலை உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்கள், மற்றும் வான் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை சாத்தியமாக்குவதோடு, ஒரு பிராந்திய உணவு விநியோக மையமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின், விலை நிலைத்தன்மையைக் கண்காணிப்பதும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சந்தைகளில் பொருட்கள் நன்கு கையிருப்பில் உள்ளதாகவும், பற்றாக்குறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், விநியோகத்தைப் பராமரிப்பதிலும், நிலையான விலைகளை நிர்ணயிப்பதிலும் சில்லறை விற்பனை நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, லூலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் விமானங்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மூலம் 5,000 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் யூசுஃப் அலி எம். ஏ. கூறியுள்ளார்.
மேலும், சில்லறை விற்பனையாளர்களிடையே அதிகரித்த விநியோகம் மற்றும் போட்டியின் காரணமாக, அரிசி, எண்ணெய், பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பரந்த அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 90% அத்தியாவசியப் பொருட்கள் வர்த்தகத்தை உள்ளடக்கிய, 600-க்கும் மேற்பட்ட முக்கிய விற்பனை நிலையங்களில் நிகழ்நேர விலை கண்காணிப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சந்தையின் தொடர்ச்சியான நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஏதேனும் விலை மீறல்கள் அல்லது பற்றாக்குறைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel