ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், வரும் நாட்களில் நாடு முழுவதும் நிலையற்ற வானிலை நிலவும் எனவும், குறிப்பாக மேகமூட்டமான வானம், ஆங்காங்கே மழை மற்றும் பலத்த காற்று வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறைந்த காற்றழுத்த அமைப்பு நாட்டை பாதித்து வருவதாகவும், இது பல பகுதிகளில் மாறுபட்ட தீவிரத்துடன் கூடிய மழையைக் கொண்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் படி, செவ்வாய்க்கிழமையான இன்று, அமீரகத்தில் பகுதி மேகமூட்டம் முதல் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பச்சலன மேகங்கள் உருவாகி பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காற்றின் வேகம் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை இருக்கும், ஆனால் மேகமூட்டத்தின் போது அது பலமாக வீசக்கூடும். இதனால் புழுதிப் புயல் மற்றும் தெரிவுநிலை குறையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரபிக் கடல் மற்றும் ஓமான் கடலில் அலைகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றாலும், அவ்வப்போது சீற்றம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலைகளைப் பொறுத்தமட்டில், கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 24°C முதல் 27°C வரையிலும், உட்புற பகுதிகளில் 23°C முதல் 28°C வரையிலும், மலைப் பகுதிகளில் 17°C முதல் 21°C வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் 85 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த பரவலான மழையைத் தொடர்ந்து இந்த முன்னறிவிப்பு வந்துள்ளது. திங்களன்று, அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பநிலை கணிசமாக குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது.
இந்நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமை வரை மழை விட்டு விட்டுப் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர, உட்புற மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதன் தீவிரம் மாறுபடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பின்னர், வாரத்தின் இறுதியில் வானிலை படிப்படியாக மேம்படக்கூடும் என்றாலும், நாட்டின் சில பகுதிகளில் மேகமூட்டம் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
ஆகையால், நிலையற்ற வானிலையின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டவும், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், வெள்ளம் வர வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கனமழை அல்லது ஆலங்கட்டி மழையின் போது மக்கள் வீட்டிற்குள் இருக்கவும், வெளிப்புறத்தில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுபோன்ற சூழ்நிலைகளில் இடி சத்தம் கேட்பது இயல்பானது என்றும், ஏதேனும் முக்கிய எச்சரிக்கைகள் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel