தற்போதைய பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில், நியாயமற்ற விலை உயர்வைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் சந்தை ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுத் துறைகளுடன் இணைந்து நாடு முழுவதும் 4,468 ஆய்வு சுற்றுப்பயணங்களை நடத்தியதாக அறிவித்துள்ளது, மேலும், 554 மீறல்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்களால் செய்யப்படும் மிகவும் பொதுவான மீறல் அநியாய விலை உயர்வாகும். இந்த அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வர்த்தகர்கள், சப்ளையர்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு 449 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் விதி மீறுபவர்களுக்கு 176,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நுகர்வோர் பாதுகாப்புக்கான உயர் குழுவின் தலைவருமான அப்துல்லா பின் துக் அல் மர்ரி அவர்கள் , துபாயில் உள்ள அல் அவீர் மத்திய காய்கறி மற்றும் பழ சந்தைக்கு (Al Awir Central Vegetable and Fruit Market) மேற்கொண்ட கள வருகையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போதைய பிராந்திய நெருக்கடியின் போது சந்தைகளில் போதுமான அளவு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இந்த வருகை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உணவு விநியோகங்களை தினசரி கண்காணித்தல்
இப்போதைய சூழலில், சப்ளையர்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களிடையே இருப்பு நிலைகளை தினசரி கண்காணிக்க அமைச்சகம் பொருளாதாரத் துறைகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதாக அல் மர்ரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் விநியோக நிலைகள் குறித்த விரிவான பகுப்பாய்வுகளையும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர், இது சந்தைகள் நன்கு இருப்பில் இருப்பதையும், ஏதேனும் சாத்தியமான பற்றாக்குறைகள் தடுக்கப்படுவதையும் உறுதிசெய்ய உதவுகிறது.
ரமலான் மாதத்தில் ஆய்வுகள்
ரமலான் காலத்தில் சந்தை விலை நிலைத்தன்மையை பராமரிப்பதில் கண்காணிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டது, குறிப்பாக ரமலான் காலத்தில், நுகர்வோர்களின் தேவை பொதுவாக அதிகரிக்கும் போது முன்னெச்சரிக்கை சோதனை அவசியமாகும். அந்த வகையில், ரமலான் முழுவதும் 420க்கும் மேற்பட்ட ஆய்வு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட ஒரு செயல் திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரின் கூற்றுப்படி, நாடு முழுவதும் உள்ள சந்தைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விநியோக மையங்களைப் பார்வையிடும் சிறப்புக் குழுக்களால் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
நிகழ்நேர விலை கண்காணிப்பு அமைப்பு
கள ஆய்வுகளுக்கு கூடுதலாக, அமைச்சகம் டிஜிட்டல் விலை கண்காணிப்பு அமைப்பை நம்பியுள்ளது, இது அதிகாரிகள் நிகழ்நேரத்தில் விலைகளைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.
கூட்டுறவு சங்கங்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சூப்பர் மார்கெட்கள் உட்பட 627 முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களுடன் இந்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது, இவை ஐக்கிய அரபு அமீரகத்தில் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் உள்நாட்டு வர்த்தகத்தில் சுமார் 90 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
சந்தை நிலைத்தன்மையை பராமரிக்கவும், நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும் முன்னேற்றமான முடிவுகளை எடுக்கவும் கண்காணிப்பு அமைப்பு உதவுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel