ஈரான் சம்பந்தப்பட்ட பிராந்திய பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மார்ச் 31, செவ்வாய்க்கிழமை அன்று பல ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல அச்சுறுத்தல்களை முறியடித்ததாகவும், துபாய் மற்றும் ஷார்ஜா முழுவதும் நடந்த சம்பவங்களுக்கு அவசரகால குழுக்கள் விரைவாக பதிலளித்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பதிவான முக்கிய சம்பவங்கள்
துபாய் கடலுக்கு அருகில், அல் சல்மி என்ற குவைத் எண்ணெய் கப்பலை ட்ரோன் மூலம் குறிவைத்து தாக்கப்பட்டதை குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதுடன், கப்பலுக்குள் தீ விபத்தும் ஏற்பட்டது. இருப்பினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, மேலும் எண்ணெய் கசிவு ஏதுமின்றி தீ பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், துபாயின் அல் பதா பகுதியில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணை துண்டுகள் பழைய ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது; இதில் நான்கு பேர் சிறு காயங்களுடன் தப்பினர். அதேபோல், சவுத் துபாயில் நடந்த மற்றொரு சிதறல் சம்பவத்திலும் சொத்து சேதம் ஏற்பட்டதுடன், இரண்டு இந்தியர்கள் உட்பட நான்கு ஆசிய நாட்டினருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், துரையா தொலைத்தொடர்பு நிறுவனக் கட்டிடத்தை குறிவைத்த ட்ரோன் தாக்குதலுக்கும் ஷார்ஜா அதிகாரிகள் பதிலளித்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் நிலைமை விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புகள் மற்றும் இடைமறிப்புகள்
மார்ச் 31 அன்று, ஈரான் நடத்திய தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தொடங்கியதிலிருந்து இதுவரை இடைமறிக்கப்பட்ட மொத்த ஏவுகணைகளின் எண்ணிக்கை 433 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 19 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,977 ட்ரோன்கள் என உயர்ந்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட, இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 188 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு ஆலோசனை
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, துபாய் காவல்துறை, குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைத் துண்டுகளையும் அணுகுவதையோ அல்லது தொடுவதையோ தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது.
பாதிப்பற்றவை போல் தோன்றும் பொருட்கள்கூட ஆபத்தானவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்ததோடு, சந்தேகத்திற்கிடமான எதையும் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பொதுப் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்பதை வலியுறுத்தி, அதிகாரிகள் வான்வெளி மற்றும் கடல் பகுதிகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel