ADVERTISEMENT

UAE: குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத் தவறினால் பெற்றோர்களுக்கு 20,000 வரை அபராதம்..!!

Published: 11 Mar 2026, 9:02 PM |
Updated: 11 Mar 2026, 9:02 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள், தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாயத் தடுப்பூசிகளைச் செலுத்துவதை உறுதி செய்யத் தவறினால், அவர்களுக்கு 20,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம். நாட்டின் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கூட்டாட்சி தேசிய சபையால் அங்கீகரிக்கப்பட்ட (Federal National Council) திருத்தங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது, ​​இச்சட்டத் திருத்த வரைவுகளை அபுதாபி நிர்வாக சபை அங்கீகரித்துள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின்படி, தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்படி தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மறுக்கும் அல்லது அலட்சியம் காட்டும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு, 5,000 திர்ஹம்ஸ் முதல் 20,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த அபராதங்களைச் செயல்படுத்துவதற்கான துல்லியமான நடைமுறைகளையோ அல்லது பெற்றோர்களுக்கு எதிராக எத்தகைய சூழ்நிலைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையோ அதிகாரிகள் இன்னும் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

கட்டாயத் தடுப்பூசித் திட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ், பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, பிறப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை அவர்களுக்குத் தொடர்ச்சியான கட்டாயத் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

நாட்டின் தடுப்புச் சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் செலுத்தப்படும் வழக்கமான மற்றும் கூட்டுத் தடுப்பூசிகளை உள்ளடக்கியதாக இந்தத் தடுப்பூசி அட்டவணை அமைந்துள்ளது. தேசியத் திட்டத்தின் கீழ், பச்சிளம் குழந்தைகள் மற்றும் பிற குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படும் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுகாதார அபாயங்களின் போது அரசாங்கத்தின் அதிகாரங்கள்

தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தடுப்பூசிகளைச் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் அதிகாரத்தையும் இச்சட்டத் திருத்தங்கள் அதிகாரிகளுக்கு வழங்குகின்றன. அத்தகைய கட்டாய அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டால், அது ஊடகங்கள் மற்றும் பொதுத் தொடர்பு வழிகள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவக் காரணங்களால் குறிப்பிட்ட தடுப்பூசிகளைப் பெற இயலாத தனிநபர்களுக்கு, அவர்களின் உடல்நிலையின் அடிப்படையில் அதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது சுகாதாரச் சட்டங்களை வலுப்படுத்துதல்

தொற்றுநோய்களை நிர்வகிப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் விரிவான மாற்றங்களின் ஒரு பகுதியாக இத்திருத்தங்கள் அமைந்துள்ளன. நோய்க் கண்காணிப்பு முறையை மேம்படுத்துதல், நோய் தடுப்பு மற்றும் மீட்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், மற்றும் எதிர்காலச் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாட்டைத் தயார்படுத்துதல் ஆகியவற்றை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த சபையின் அமர்வின் போது பேசிய அஹமது பின் அலி அல் சாயேக் அவர்கள், உலகளாவிய சுகாதாரத் துறையில் ஏற்பட்டு வரும் விரைவான மாற்றங்களையும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் கருத்தில் கொள்ளும்போது, ​​இச்சட்டங்களை இக்காலத்திற்கு ஏற்பப் புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய வலுவான சட்டம், நாடு சமூக நல்வாழ்வைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொது சுகாதார அபாயங்களுக்கு விரைவாக பதிலளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், புதுப்பிக்கப்பட்ட இந்த சட்டமானது, தேசிய சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel