அல் அய்ன் பழம் மற்றும் காய்கறி சந்தைக்கு ஆய்வு மேற்கொண்ட பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவு விநியோகம் சீராக இருப்பதாகவும், பற்றாக்குறை அல்லது நியாயமற்ற விலை உயர்வுகளுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரமலான் மற்றும் ஈத் பண்டிகைக் காலங்களில் நுகர்வு வழக்கமாக அதிகரிக்கும் நிலையில், புவிசார் பதட்டங்கள் நிலவும் இக்காலகட்டத்திலும், அதிகாரிகள் சந்தைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் வேளையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, அமைச்சர் விநியோகச் சங்கிலிகள், கையிருப்பு நிலைகள் மற்றும் விலை நிர்ணய நடைமுறைகளை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கள வருகையின் மூலம், விநியோகங்கள் வழக்கம் போல் தொடர்வதையும், சந்தைகள் சீராக இயங்குவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு உரையாற்றிய அமைச்சர், “நாட்டின் அனைத்து சந்தைகளிலும் நிலைத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று கூறியதுடன், பொருட்களின் தடையற்ற இருப்பை உறுதி செய்வதற்காக விலைகள், கையிருப்பு நிலைகள் மற்றும் விநியோகச் சங்கிலி செயல்திறன் ஆகியவை தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிடங்குகளிலும் கடைகளிலும் பொருட்கள் எளிதில் கிடைப்பதால், பற்றாக்குறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது, ஐக்கிய அரபு அமீரகத்தின் தளவாட வலையமைப்பு மற்றும் மூலோபாய இருப்புகளின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம், பொருட்களின் விலைகள் அல்லது அளவுகளில் அசாதாரண ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி, விநியோக நகர்வு சீராக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியாயமற்ற விலை உயர்வுகளைத் தடுத்தல் மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளைப் பேணுதல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பெரிய அளவிலான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இதுவரை, 12,000-க்கும் மேற்பட்ட ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக, விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்பான 249 விதிமீறல்களும், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 900-க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், விலைகளைக் கையாளுதல், தவறான தகவல்களைப் பரப்புதல் அல்லது சந்தை நிலவரங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற எந்தவொரு முயற்சிக்கும் தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நெருக்கடியான காலகட்டத்தில் சமச்சீரான நுகர்வு விலை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், அனைவருக்கும் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யவும் உதவுவதால், குடியிருப்பாளர்களும் பொறுப்புடன் பொருட்களை வாங்கவும், அதிகப்படியான கொள்முதலைத் தவிர்க்கவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அதிகபட்ச தேவை உள்ள காலங்களில்கூட, ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு, மாற்று விநியோக வழிகள் மற்றும் ஒருங்கிணைந்த இருப்பு அமைப்புகள் ஆகியவை சீரான விநியோகத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்றும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel