சமீப காலமாக பொதுமக்களைக் குறிவைத்து, தனிப்பட்ட தரவுகளைத் திருட முயற்சிக்கும் போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் மோசடி செய்திகள் அதிகரித்துள்ளதாக அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
இத்தகைய செயல்களை புரியும் மோசடிக்காரர்கள் பின்வருவனவற்றை விளம்பரப்படுத்துவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்:
- போலி இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள்
- போலி ரெசிடென்சி விசா சேவைகள்
- தவறான வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு சலுகைகள்
- அங்கீகரிக்கப்படாத காப்பீட்டுத் திட்டங்கள்
- நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் போலி வாகன விற்பனை
- தனிப்பட்ட விவரங்களைக் கோரும் பார்சல் விநியோக மோசடிகள்
மேலும் சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் நோக்கில் சட்டவிரோத முதலீட்டு சலுகைகள் மற்றும் இல்லாத ரியல் எஸ்டேட் திட்டங்களை விளம்பரப்படுத்தி மோசடியாகப் பணம் பறிப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சமூக ஊடக கணக்குகள் பெரும்பாலும் மிகவும் நம்பத்தகுந்தவையாகத் தோன்றுவதாகவும், நம்பிக்கையைப் பெறுவதற்காக தொழில்முறை தோற்றமுடைய விளம்பரங்கள், போலிப் படங்கள் மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்ட செய்திகளைப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, குடியிருப்பாளர்கள் ஆதாரங்களைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வமான, நம்பகமான தளங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய பாதுகாப்பு ஆலோசனைகள்:
மேலும், முறையான சரிபார்ப்பு இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்யவோ அல்லது தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிரவோ கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தியதுடன், இதுபோன்ற சைபர் குற்றங்களுக்கு எதிரான முதல் பாதுகாப்பு அரணாக விழிப்புணர்வு உள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
மோசடிகளைப் புகாரளிப்பது எப்படி?
குடியிருப்பாளர்கள் சந்தேகத்திற்கிடமான சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸ் அல்லது விளம்பரங்கள் ஏதேனும் தென்பட்டால், 8002626 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமாகவோ, 2828 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவோ, aman@adpolice.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ அல்லது “Police Station in Your Pocket” சேவையைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ உடனடியாகப் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், மோசடி கணக்குகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபுதாபி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருப்பதும், அனைத்து ஆன்லைன் சலுகைகளையும் பயன்படுத்துவதற்கு முன்பு சரிபார்ப்பதும் அவசியம் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel