ஈரானுடனான பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் முதல் காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் வரை மத்திய கிழக்கு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், வெள்ளிக்கிழமையன்றும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தச் சமீபத்திய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இந்த நெருக்கடி இப்போது உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் தொடர்ந்து (Strait of Hormuz) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் (IRGC) கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை மோதலின் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது. இது அந்த முக்கிய நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
அந்தக் கண்ணிவெடிகள் இப்போது அகற்றப்பட்டுவிட்டதாகவும், இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த இடையூறுகளால் சுமார் 6,000 மாலுமிகளைக் கொண்ட 400 கப்பல்கள் ஏற்கனவே நடுக்கடலில் சிக்கியுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை எண்ணெய் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய பாதையாக இருப்பதால், நீண்டகால இடையூறுகள் உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பதற்றத்தைத் தணிக்க கத்தார் முயற்சி
நாடுகளுக்கிடையேயான மோதலால் ராணுவ பதற்றங்கள் நீடிக்கும் அதே வேளையில், ராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதற்றத்தைக் குறைக்கவும், மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தார் பிரதமர் வியாழக்கிழமை தெஹ்ரானுக்குச் சென்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், வாஷிங்டன் (அமெரிக்கா) கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்காக சீன வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பால் உணர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றும் இப்பகுதியை நோக்கிச் செல்லத் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், காசாவில் இந்த மோதல் தொடர்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பாலஸ்தீனப் பகுதி அதிகாரிகளின் தகவலின்படி, வெள்ளிக்கிழமையன்று காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் கான் யூனிஸின் கிழக்குப் பகுதியான அல்-கராராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் மேலும் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல்களை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் (Jenin) பகுதியிலும் இஸ்ரேல் அரிதான வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் என்று தாங்கள் விவரித்த பலரை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு ராணுவ நடவடிக்கைகளுடன் இணைந்து ராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பிராந்தியத்தில் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தின் மீதான நெருக்கடியை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தணிக்கக்கூடும் என்றாலும், ஆயிரக்கணக்கான மாலுமிகள் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர். அத்துடன் எரிசக்தி விநியோகம் மற்றும் உலகளாவிய வர்த்தகம் குறித்த கவலைகளும் நீடிக்கின்றன.
அதே வேளையில், காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள், இப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான சூழல் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை உணர்த்துகின்றன.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel