துபாயில் இன்று (ஜனவரி 19, ஞாயற்றுக்கிழமையன்று) ஆண் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ‘Dubai Ruler’s Court Race’ என்ற சைக்கிளிங் பந்தயம் நடைபெறவிருப்பதால், நகரின் 10 சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் RTA வெளியிட்ட அறிக்கையில், அல் சீஃப், ரியாத், ஷேக் ரஷித், ஷேக் சையத், அல் மஜ்லிஸ், ஜாபீல் பேலஸ், அல் அய்ன்-துபாய் சாலை, சையத் பின் ஹம்தான், அல் குத்ரா மற்றும் சைஹ் அல் சலாம் ஆகிய சாலைகள் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த 193 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் வரலாற்று சிறப்புமிக்க அல் ஃபாஹிதி மாவட்டத்தில் உள்ள ஆட்சியாளர் நீதிமன்றத்தில் மதியம் 1 மணிக்குத் தொடங்கி அல் மர்மூமில் உள்ள சைக்கிளிங் டிராக்கில் முடிவடையும் என்றும், இது 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, சைக்கிள் ஓட்டுபவர்கள் கடந்து செல்லும் போது போக்குவரத்து இடைநிறுத்தம் 10 நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் கடைசியாக சைக்கிள் ஓட்டிய உடனேயே சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது. இது தவிர, அல் குத்ரா சைக்கிள் ஓட்டும் பாதை பந்தயத்தின் போது மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் காலதாமதங்களைத் தவிர்ப்பதற்காக தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சைக்கிள் பந்தயம், அல் மர்மூம் கன்சர்வேஷன் ரிசர்வில் முடிவடைவதற்கு முன்பு, ஓல்டு துபாய் கஸ்டம்ஸ் பில்டிங், பாதுகாப்பு அமைச்சகம், துபாய் க்ரீக், அல் சீஃப் ஸ்ட்ரீட், க்ரீக் பார்க், முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், துபாய் ஃபிரேம், ஜாபீல் பார்க், ஃபியூச்சர் ஸ்ட்ரீட், துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டர், எமிரேட்ஸ் டவர்ஸ், மியூசியம் ஆப் தி ஃபியூச்சர், ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் கோபுரம் மற்றும் ஜபீல் பேலஸ் உள்ளிட்ட துபாயின் பல ஐகானிக் அடையாளங்கள் வழியாகச் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
UAE மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளைச் சேர்ந்த உயரடுக்கு சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் இந்த பந்தயம், ஆண்களுக்கான ‘துபாய் ரூலர்ஸ் கோர்ட் ரேஸ்’ (Dubai Ruler’s Court Race) அல் சலாம் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். இது துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel